நான் கணிச்ச கணிப்பெல்லாம் தப்பா போச்சே.. நேரலையில் கண்ணீர்விட்ட ஆக்சிஸ் மை இந்தியா எம்டி பிரதீப்
டெல்லி : லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பான தனியார் தொலைக்காட்சி விவாதத்தின் போது நேரலையிலேயே ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனர் பிரதீப் குப்தா கதறி அழுதுள்ளார்.
நாட்டில் லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில் பாஜக கூட்டணி 293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 233 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 17 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருந்த நிலையில், தேர்தல் முடிவுகள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

குறிப்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பெரும்பாலான கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் பாஜக 300 இடங்களுக்கு மேல் தனித்து வெற்றிபெறும் என்று கூறியிருந்தனர். ஆனால் தேர்தல் முடிவு கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக வந்துள்ளது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சியில் செய்தித் தொடர்பாளர்கள், கருத்துக் கணிப்பு நிறுவனர் பிரதீப் குப்தா உடன் விவாதம் நடந்தது.
இந்த விவாதத்தின் போது பிரதீப் குப்தா, திடீரென கண்ணீர்விட்டு அழத் தொடங்கினார். இதன்பின் அருகில் இருந்த நிர்வாகிகள், செய்தி தொலைக்காட்சி ஊழியர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர். ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனத்தின் நிறுவனரான பிரதீப் குப்தா கண்ணீர்விட்டு அழுத வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் ஆக்ஸில் மை இந்தியா நிறுவனம் தரப்பில் பாஜக கூட்டணி 361 முதல் 401 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும், இந்தியா கூட்டணி 131 - 166 தொகுதிகள் வரை வெற்றிபெறும் என்று கருத்துக் கணிப்பை வெளியிட்டது. அதேபோல் மற்ற கட்சிகள் 8 முதல் 20 தொகுதிகள் வரை வெல்லும் என்று தெரிவித்திருந்தது.
இதனை காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் மொத்தமாக புறந்தள்ளிய நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பின் ராகுல் காந்தி உட்பட அனைவரும் எங்களின் கருத்துக் கணிப்பு சரி என்று புரிந்து கொள்வார்கள் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications