அயோத்தி வழக்கில் சீராய்வு மனு செய்வோம்.. இது அரசியலமைப்பு உரிமை.. முஸ்லிம் சட்ட வாரியம் அறிவிப்பு
டெல்லி: அயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவித்துள்ளது. சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என சன்னி வக்ஃப் வாரியம் அறிவித்திருந்த நிலையில், டிசம்பர் முதல் வாரம் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என திட்டவட்டமாக அறிவித்துள்ளது முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்.
"Exercising our constitutional right, we are going to file a review petition in the #Babrimasjidcase during the first week of December. Sunni Waqf Board's decision not to pursue the case won't legally affect us. All Muslim organizations are on the same page" @Zafaryab_Jilani:
— All India Muslim Personal Law Board (@AIMPLB_Official) November 27, 2019
"எங்கள் அரசியலமைப்பு உரிமையைப் பயன்படுத்தி, டிசம்பர் முதல் வாரத்தில் பாபர் மசூதி வழக்கில், சீராய்வு மனுவை தாக்கல் செய்ய உள்ளோம். வழக்கைத் தொடர வேண்டாம் என்று சன்னி வக்ஃப் வாரியம் எடுத்த முடிவு எங்களை சட்டப்பூர்வமாக பாதிக்காது. அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒரே பக்கம் உள்ளன " என்று ட்விட்டரில் முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் அறிவித்துள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்ற, மிக முக்கியமான வழக்கில், உச்சநீதிமன்றம், கடந்த 8ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அப்போதைய தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு வழங்கிய ஒருமித்த தீர்ப்பின்படி, சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்புக்கு சொந்தமானது என அறிவிக்கப்பட்டது.
அதேநேரம், முஸ்லீம்களுக்காக 5 ஏக்கர் நிலத்தை அரசு வழங்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இந்த வழக்கில், முஸ்லீம்கள் தரப்பாக வாதிட்டது, உத்தர பிரதேச மாநில சன்னி வக்ஃப் வாரியம். இந்த தீர்ப்பு தொடர்பாக சன்னி வக்ஃப் வாரிய உறுப்பினர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவின.
சீராய்வு மனு தாக்கல் செய்யலாம் என்றும், வேண்டாம் என்றும் சன்னி வக்ஃப் வாரியத்தில் இருவேறு கருத்துக்கள் இருந்தன. இதுகுறித்து, முடிவு செய்ய, லக்னோவில் நேற்று, சன்னி வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய, சன்னி வக்ஃப் வாரியத்தின் நிர்வாகி அப்துல் ரசாக் கான், "பெரும்பாலான உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டாம் என்று கருதுகிறார்கள். எனவே, சீராய்வு மனு தாக்கல் செய்ய நாங்கள் விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.