அயோத்தி பிரதான வழக்கு.. ஜனவரிக்கு விசாரணை ஒத்திவைப்பு.. உச்சநீதிமன்றம் உத்தரவு!
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை ஜனவரியில் இருந்து உச்ச நீதிமன்றம் விசாரணை செய்கிறது.
டெல்லி: அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை 2019 ஜனவரியில் இருந்து உச்ச நீதிமன்றம் விசாரணை செய்கிறது.
அயோத்தி வழக்கு மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிரான செய்யப்பட மேல்முறையீட்டு மனுக்கள் மீது 2019 ஜனவரியில் இருந்து விசாரணை தொடங்க உள்ளது.

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலம்தான் பிரச்சனைக்கு காரணம். இந்த நிலம் தங்களுடையது என்று இந்து அமைப்புகளும் இஸ்லாமிய அமைப்புகளும் சண்டையிட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து 1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. மிகப் பெரும் கலவரத்திற்கு இது வித்திட்டது. இது தொடர்பான வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2 .77 ஏக்கர் நிலத்தை மனுதாரர்கள் பிரித்துக் கொள்ளும்படி கூறியது. அதன்படி சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் நிலத்தை பிரித்துக்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
கடந்த 2010-ல் வந்த இந்த தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மூலம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை எப்போது தொடங்கும் என்று இன்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி வழக்கு விசாரணை 2019 ஜனவரியில் தொடங்கும். 2019 மார்ச் மாதம் வரை விசாரணை நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி அயோத்யா துணை வழக்கில் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அயோத்யா வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று தீர்ப்பளித்தது. மேலும் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுக்கு மசூதி தேவையா என்ற துணை வழக்கின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications