தூக்கி அடித்த பாபா ராம்தேவ்.. மேடையில் தொகுப்பாளருடன் ‛லைவ்’ இண்டர்வியூவில் சண்டையிட்டதால் ஷாக்
டெல்லி: பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரான பாபா ராம்தேவ் லைவ் இண்டர்வியூவில் தொகுப்பாளருடன் சண்டையிட்டு அவருடன் மேடையில் கட்டி உருண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
ஹரியானாவை சேர்ந்தவர் பாபா ராம்தேவ். இவர் யோகா மற்றும் ஆயுர்வேத மருந்துகள் மூலமாக நாடு முழுவதும் அறியப்படுகிறார். பதஞ்சலி ஆயுர்வேதம் நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் உள்ளார். இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது உண்டு.

குறிப்பாக தனது ஆயுர்வேத தயாரிப்புகள் குறித்து போலியாக விளம்பரங்கள் செய்து நீதிமன்றங்களின் கண்டிப்பை பலமுறை எதிர்கொண்டுள்ளார். இந்நிலையில் தான் தற்போது பாபா ராம்தேவ் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
அதாவது வடமாநிலத்தில் தனியார் பத்திரிகை நிறுவனம் சார்பில் பாபா ராம்தேவிடம் இண்டர்வியூ எடுக்கப்பட்டது. இந்த இண்டர்வியூ லைவாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. பாபா ராம்தேவ் தன்னிடம் இண்டர்வியூ எடுத்த நபரிடம் சண்டைக்கு செல்கிறார்.
பதிலுக்கு அந்த நபர் பாபா ராம்தேவை தடுத்து நிறுத்த முயற்சிப்பதோடு, அவரிடம் இருந்து தன்னை தற்காத்து கொள்ள நினைக்கிறார். ஆனால் பாபா ராம்தேவ் விடவில்லை. அவருடன் பயங்கரமாக மோதுகிறார். ஒரு கட்டத்தில் மல்யுத்த போட்டியில் இருவீரர்கள் அடித்து கொள்வது போல் பாபா ராம்தேவ் , அந்த நபரை ‛அட்டாக்' செய்ய நினைக்கிறார். ஆனால் அது கைகூடவில்லை.
ஆனால் அதற்குள் அந்த நபர் பாபா ராம்தேவை கீழே தள்ளினார். இருவரும் மேடையில் கட்டியணைத்து உருண்டு சண்டையிட்டு கொள்கின்றனர். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி விவாதத்தை கிளப்பியது. இருவரும் எதற்காக சண்டையிட்டனர்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் பாபா ராம்தேவ் தொலைக்காட்சி விவாதங்களில் அடிக்கடி சர்ச்கை்குரிய கருத்து, சர்ச்சைக்குரிய உடல்மொழியை பயன்படுத்துவது வழக்கம். இதனால் இந்த விவகாரத்தின் பின்னணி பற்றி அறிந்து கொள்ள பல நெட்டிசன்களும் ஆர்வம் காட்டினர்.
இந்நிலையில் தான் தற்போது அதற்கு பாபா ராம்தேவ் விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛நான் எனது பலத்தை நிரூபிப்பதற்காக தான் இதனை செய்தேன். இது முழுக்க முழுக்க வேடிக்கைக்காகவும், விளையாட்டிற்காகவும் நடந்தது. இதனை யாரும் தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும்'' என்றார்.
இதனை கேட்ட நெட்டிசன்கள் பாபா ராம்தேவை விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு தரப்பினர், பாபா ராம்தேவ் தனது நிகழ்ச்சியை பிரபலப்படுத்துவதற்காக இப்படி செய்கிறார்.. இது மோசடி என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி நிகழ்ச்சி நடத்தியவர்களையும் நெட்டிசன்கள் திட்டி வருகின்றன. இப்போது நிகழ்ச்சிகள் டிஆர்பி மற்றும் அதிக பார்வைகளை பெற மல்யுத்த களங்களை கொண்டு வருகின்றன என்று விமர்சனம் செய்தனர். அதே வேளையில் மற்றொரு தரப்போ பாபா ராம்தேவ் தோற்றுவிட்டார் என்று வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications