பக்ரீத் பண்டிகைக்கு பசு, கன்று, ஒட்டகம் பலியிட அதிரடி தடை.. டெல்லி பாஜக அமைச்சர் உத்தரவு.. பின்னணி
டெல்லி: பக்ரீத் பண்டிகை வரும் 28 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தான் டெல்லியில் பசு மாடு, கன்று மற்றும் ஒட்டகம் பலியிடுவதற்கு தடை விதித்து டெல்லி பாஜக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லியில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ரேகா குப்தா உள்ளார். வரும் 28 ம் தேதி இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகை கொண்டாட உள்ளனர்.

பக்ரீத் பண்டிகையின்போது இஸ்லாமியர்கள் ஆடு, மாடு, ஒட்டகத்தை பலியிடுவது வழக்கம். இந்நிலையில் தான் டெல்லியில் பக்ரீத் பண்டிகையொட்டி பசு மாடு, கன்றுகுட்டிகள், ஒட்டகம் பலியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை டெல்லி மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் மிஸ்ரா பிறப்பித்துள்ளார். அதாவது பக்ரீத் பண்டிகையையொட்டி டெல்லியில் அதிகாரிகளுடன் அமைச்சர் கபில் மிஸ்ரா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு அவர்கள் பக்ரீத் பண்டிகைக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தார்.
பக்ரீ்த பண்டிகையின்போது விலங்கு நல சட்டங்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இதனை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். பொது சுகாதாரத்தை பேணவும், சட்டவிதிகளுக்கு இணங்குவதையும் உறுதி செய்ய வேண்டும். சட்டவிரோதமாக ஆடு, மாடு, ஒட்டகம் கொண்டு செல்லப்படுவதை தடுக்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத இடங்களில் பலியிடுவதை தடுக்க வேண்டும். மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் கபில் மிஸ்ராவின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''பக்ரீத் பண்டிகை காலத்தில் பசுக்கள், கன்றுகள், ஒட்டகங்கள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட விலங்குகளை அறுப்பதற்கோ அல்லது பலியிடுவதற்கோ விதிக்கப்பட்டுள்ள தடையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சாலைகள், தெருக்கள் அல்லது பிற பொது இடங்களில் பலியிடுதல் கூடாது. பொது இடங்களில் விலங்குகளை வாங்குவதும் விற்பதும் முற்றிலும் சட்டவிரோதமானது.
சட்டவிரோதமாக விலங்கு பலியிட்டால் அவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பலியிடப்பட்ட விலங்குகளின் ரத்தம் சாலைகள், வடிகால்கள் அல்லது கால்வாய்களில் பாயாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும், பலிக்கு பிறகு எஞ்சியவற்றைத் திறந்தவெளியில் கொட்டக் கூடாது'' என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக மேற்கு வங்க மாநில பாஜக அரசும் இதுபோன்ற உத்தரவை பிறப்பித்தது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடித்தது. முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்று செயல்பட்டு வருகிறார். அங்கும் பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடு, மாடு, ஒட்டகம் பலியிட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்பாக பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது. ஆடு, மாடு, ஒட்டகத்தை தெருக்கள், சந்துக்களிலும் பலியிட முதலில் தடை விதிக்கப்பட்டது. அந்த வரிசையில் தற்போது டெல்லியில் ஆளும் பாஜக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications