இந்தியாவை விட்டுவிட்டு பாகிஸ்தானிடம் ஓடும் வங்கதேசம்! பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்
டெல்லி: பாகிஸ்தான் ராணுவ தளபதியை, வங்கதேசத்தின் கடற்படை தளபதி நேரில் சென்று சந்தித்திருப்பது கவனம் பெற்றதாக மாறியிருக்கிறது. ஆசிய பிராந்தியத்தில் பாகிஸ்தானை விட இந்தியா பலம் வாய்ந்த நாடாக இருக்கும் நிலையில், இந்தியாவை வங்கதேசம் தவிர்த்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஏற்கெனவே சீனாவிடம் பாகிஸ்தான் நெருக்கம் காட்டி வருகிறது. இப்படி இருக்கையில், பாகிஸ்தானிடம் வங்கதேசம் நெருக்கம் காட்டுவது இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

என்ன பேசினார்கள்?:
கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் ராணுவத் தளபதி சையத் அசிம் முனீர் அகமது ஷாவை, வங்கதேச கடற்படைத் தளபதி அட்மிரல் முகமது நஸ்முல் ஹாசன் சந்தித்து பேசியிருக்கிறார். கடந்த ஒரு மாதத்தில் நடந்த இரண்டாவது சந்திப்பாகும். சந்திப்பின்போது என்ன பேசினார்கள்? எதேனும் ஒப்பந்தம் மேற்கொண்டார்களா? இந்தியாவுக்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றிருந்ததா? என்பது குறித்து எந்த தகவல்களும் பொது வெளியில் பகிரப்படவில்லை.
சர்வதேச கடற்படைப் பயிற்சியை பாகிஸ்தான் முன்னெடுத்து நடத்த இருக்கிறது. இதில் வங்கதேசம் பங்கேற்பது குறித்து பேசப்பட்டிருக்கலாம் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. அதேபோல இந்த மாதம் முதல் வங்கதேச ராணுவத்திற்கான பயிற்சிகளை பாகிஸ்தான் தொடங்க இருக்கிறது. இவை இரண்டும் இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
வங்கதேச இடைக்கால அரசு:
பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட வறுமை, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் வங்கதேசத்தில் நீண்ட காலமாக இருந்து வந்தன. இதனால் அங்கு மாணவர்கள் புரட்சி வெடிக்க தொடங்கியது. இது கொஞ்சம் கொஞ்சமாக இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியிலும் பரவியது. எனவே ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு அகற்றப்பட்டு தற்போது இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது. ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார்.
இதுநாள் வரையில் இந்தியாவிடம் உதவி கேட்டு வந்த வங்கதேசம், இடைக்கால அரசு பொறுப்பேற்ற பின்னர் சீனாவை நாட தொடங்கியுள்ளது. சீனாவும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வங்கதேசத்தை கடன் வலையில் விழ வைக்க தீவிரமாக வேலை பார்த்து வருகிறது.
இந்தியாவுக்கு என்ன சிக்கல்:
ஏற்கெனவே இலங்கையும், மாலத்தீவும் சீனா பேச்சை கேட்டுதான் ஆடி வருகின்றன. இப்படி இருக்கையில் இந்த லிஸ்ட்டில் புதியதாக வங்கதேசமும் இணைந்திருப்பது இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் அதிபர் சீனாவுடன் சில ஒப்பந்தங்களை போட்டிருந்தார். இப்போது, வங்கதேசமும் சேர்ந்திருப்பதால் இந்தியாவை வேண்டும் என்றே சீனா வம்பிழுக்க வாய்ப்பு இருக்கிறது.
வங்கதேசம், மாலத்தீவு, இலங்கை மற்றும் பாகிஸ்தான் இது நான்கும் இந்தியாவின் பக்கத்து நாடுகள். ஆனால் இவற்றை விட இந்தியாதான் பொருளாதாரத்திலும், ராணுவ பலத்திலும் பல மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. ஆனால், இந்த நாடுகள் தொடர்ந்து தொல்லை கொடுத்தால் அது இந்திய இறையாண்மையை பாதிக்கும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications