ஸ்டிரைக்.. வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை.. அவசர தேவைக்கு இப்போவே பணம் எடுத்து வைங்க மக்களே!
டெல்லி: வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் அவசர தேவைக்காக மக்கள் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
2017 ஜனவரி முதல் புதிய ஊதியம் நிலுவையில் உள்ளது. அனைவருக்கும் ஊதிய ஒப்பந்தம் அமைக்க வேண்டும், தேசிய வங்கிகள் இணைப்பு, கிராம வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கிகள் நாடு முழுவதும் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் 3.2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இன்றும் நாளையும் வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும். செவ்வாய்க்கிழமை கிறிஸ்துமஸ் விடுமுறை ஆகும். இதைத் தொடர்ந்து மீண்டும் புதன்கிழமை முதல் வேலைநிறுத்தம் தொடர்கிறது.
இதனால் டிசம்பர் 21, 22, 23, 25 வரை வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர் விடுமுறை என்பதால் மக்கள் பாதிக்காத வண்ணம் அனைத்து ஏடிஎம் மையங்களிலும் கூடுதலாக பணம் நிரப்பும் பணிகளிலும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் அவசர தேவைக்காக ஏடிஎம் மையங்களில் கூட்டம் கூட்டமாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் 26-ஆம் தேதி முதல் ஸ்டிரைக் நடைபெறும் என்பதால் புத்தாண்டையொட்டி சுற்றுலா செல்ல முயல்பவர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர்.