மின் வாகனங்களில் பேட்டரி சார்ஜ் செய்வதற்கு பதில் மாற்றலாம்! பட்ஜெட்டில் அறிவித்த நிர்மலா சீதாராமன்!
டெல்லி: மின்வாகனங்களில் பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்கு பதிலாக பேட்டரியை மாற்றிக் கொள்ள பிரத்யேக மையங்கள் அமைக்கப்படும் என நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2022-2023 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 4ஆவது முறையாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட், இரண்டாவது ஆண்டாக காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.
டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அவர் கூறுகையில் மின் வாகனங்களில் சார்ஜ் போடுவதற்கு பதில் பேட்டரியை மாற்றிக் கொள்ளும் வகையில் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

ஒரே மாதிரியான பேட்டரிகள்
அனைத்து நிறுவனங்களின் மின் வாகனங்களுக்கு ஏற்றாற் போல் ஒரே மாதிரியான பேட்டரிகள் அறிமுகப்படுத்தப்படும். நகர்ப்புற திட்டமிடுதில் மின் வாகனங்களின் பேட்டரிகளுக்கு பொது மின்னூட்டும் மையங்கள் ஏற்படுத்துதலும் அடங்கும். சார்ஜிங் மையங்கள் அமைக்கும் திட்டம் இருந்தாலும் நகர்ப்புறங்களில் அவற்றை அமைப்பதற்கு இட நெருக்கடியை கருத்தில் கொண்டு பேட்டரி மாற்றும் திட்டம் கொண்டு வரப்படும் என்றார் நிர்மலா சீதாராமன்.

ஏன் இந்த திட்டம்
பேட்டரி மாற்றும் திட்டம் என்றால் சார்ஜ் தீர்ந்து போன பேட்டரியை கொடுத்துவிட்டு சார்ஜ் உள்ள பேட்டரியை வாங்கிக் கொள்வதாகும். இதன் மூலம் வாகன ஓட்டி நீண்ட நேரம் சார்ஜ் ஏற காத்திருக்க தேவையில்லை. ஒரே பேட்டரியை சார்ஜ் போட்டு பயன்படுத்திக் கொள்வதால் நாளடைவில் அது பழுதடைந்தால் புதிய பேட்டரியை அதிக விலை கொடுத்து வாங்க நேரிடுகிறது. ஒரு வேளை பேட்டரி மாற்றும் திட்டம் கொண்டுவரப்பட்டால் மின் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தரமான அதே நேரத்தில் அப்புறப்படுத்தக் கூடிய பேட்டரியை தயாரிக்க நேரிடும். தற்போது ஹீரோ எலக்ட்ரிக், ஓகினாவா மோட்டார்ஸ், சிம்பிள் எனர்ஜி, பவுன்ஸ் எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் மட்டுமே இந்த பேட்டரி மாற்றும் திட்டத்தை பயன்படுத்த முடியும். ஆனால் ஏதர் எனர்ஜி, ஓலா எலக்ட்ரிக், டார்க் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் மின் வாகனங்களில் அப்புறப்படுத்தக் கூடிய பேட்டரி இல்லை.

பிரத்யேக மையங்கள்
இதற்காக பேட்டரியை மாற்றிக் கொள்ள பிரத்யேக மையங்கள் நாடு முழுவதும் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் எரிவாயுவை பயன்படுத்தி வாகனங்களை இயக்குவதால் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுகிறது. இதில் இருந்து வெளியாகும் பொருட்களால் ஓசோனில் ஓட்டை ஏற்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
Recommended Video

சுற்றுச்சூழல்
மேலும் பெட்ரோல், டீசலிலிருந்து வெளியேறும் பொருள்களால் காற்றும் மாசு அடைகிறது. இதை தவிர்க்க சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது பெட்ரோல் டீசல் விலையுயர்வை கருத்தில் கொண்டு மக்கள் மின் வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

40 சதவீதம்
மின்சார வாகனம் வாங்குவோருக்கு வாகனத்தின் மொத்த விலையில் 40 சதவீதம் வரை கணக்கிட்டு ஒரு கிலோவாட் பேட்டரிக்கு ரூ 15 ஆயிரம் என மத்திய அரசு மானியம் வழங்குகிறது. மின் வாகனத்தில் இருக்கும் பேட்டரி சார்ஜ் தீர்ந்துவிட்டால் சார்ஜ் ஏற்றிக் கொள்ள மின்னூட்ட மையங்கள் அமைத்தால் மட்டுமே மின் வாகனங்களுக்கு மக்கள் மாறுவர்.












Click it and Unblock the Notifications