ஷேக் ஹசீனாவுக்கு முன்னர் இந்தியா அடைக்கலம் கொடுத்த வெளிநாட்டு தலைவர்கள் யார் யார் தெரியுமா?
டெல்லி: வங்கதேச நாட்டில் மாணவர்கள் புரட்சி வெடித்த நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். வங்கதேசத்தில் இருந்து ஹெலிகாப்டரில் தப்பி இந்தியாவின் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் ஷேக் ஹசீனாவும் அவரது சகோதரியும் வந்திறங்கியுள்ளனர். திபெத், இலங்கை, பலுசிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் அரசியல் தலைவர்களுக்கும் முன்னர் இதேபோல நமது நாடு அடைக்கலம் கொடுத்திருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை அண்டை நாடுகளின் தலைவர்கள் தஞ்சமடைய அனுமதி கொடுத்துக் கொண்டே இருக்கிறது. 1950-களின் தொடக்கத்தில் நேபாளத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்ட நிலையில் மன்னர் திரிபுரவன், இளவரசர் மகேந்திரா, பேரன் பிரேந்திரா ஆகியோர் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் முதலில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் இந்திய விமானப் படை விமானம் அனுப்பி வைக்கப்பட்டு அனைவரும் பாதுகாப்பாக டெல்லிக்கு அழைத்துவரப்பட்டனர். ஓராண்டுக்குப் பின்னர் மன்னர் திரிபுரவன், நேபாளத்துக்கு திரும்பிச் சென்றார்.

1950களின் இறுதியில் திபெத் என்ற நாட்டையே சீனா ஆக்கிரமித்து தமது ஒரு பகுதியாக்கிக் கொண்டது. இதனையடுத்து திபெத் மதத் தலைவர் தலாய்லாமாவும் பல லட்சக்கணக்கான மக்களும் அந்நாட்டை விட்டு இமயமலை ஊடாக இந்தியாவுக்கு தப்பி வந்தனர். இன்றைக்கும் இந்தியாவில்தான் தலாய்லாமாவும் திபெத்தியர்களும் தஞ்சமடைந்து அகதிகளாக வாழ்கின்றனர். திபெத்திய அகதிகளுக்கு இந்திய அரசு தற்போதும் ஏராளமான சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.
லிபியாவின் பிரதமராக இருந்த அலி ஜெய்தன்க்கு சுவிஸ், ஜெர்மனி போல இந்தியாவும் 1980களில் அடைக்கலம் கொடுத்தது. அதேபோல 1980களின் இறுதியில் இலங்கைக்கு இந்தியா அமைதிப்படை சென்றது. அப்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் யுத்தம் நடைபெற்றது. இந்த யுத்த காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் இலங்கை தமிழ் போராளிக் குழுக்களின் தலைவர்கள் பலருக்கும் இந்தியா அடைக்கலம் கொடுத்தது. அப்படி அடைக்கலம் கொடுக்கப்பட்டவர்களில் பத்மநாபா, டக்ளஸ் தேவானந்தா, வரதராஜ பெருமாள் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள். இந்தியாவில் இலங்கையின் வடக்கு கிழக்கில் உருவாக்கப்பட்ட மாகாணசபை முதல்வராக இருந்தவர் வரதராஜப் பெருமாள். மிக நீண்டகாலம் இந்தியாவில் தலைமறைவாக இருக்க அனுமதிக்கப்பட்டவர் வரதராஜ பெருமாள்.
பாகிஸ்தானிடம் இருந்து தனிநாடு கோரி போராடுகிறது பலுசிஸ்தான். பலுசிஸ்தான் விடுதலைப் போராட்ட தலைவர்களில் ஒருவரான பிரஹம்தாக் புக்தியும் இந்தியாவிடம் அடைக்கலம் கோரியவர்தான்.
2015-ம் ஆண்டு மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் அப்துல கஃபூர் படகு மூலமாக இந்தியாவுக்கு தப்பி ஓடி வந்து அடைக்கலம் கோரினார். ஆனால் இந்தியா அடைக்கலம் தராமல் மாலத்தீவுக்கு திருப்பி அனுப்பியது.
2022-ம் ஆண்டு இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்த போது அந்நாட்டின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டதாக கூறப்பட்டது. அதேபோல இலங்கை ஜனாதிபதியாக இருந்த கோத்தபாய ராஜபக்சேவும் இந்தியாவில் அடைக்கலம் கேட்டிருந்தார் என ஊடகங்கள் எழுதியிருந்தன. ஆனால் இந்திய அரசு இருவருக்கும் அடைக்கலம் தரவில்லை; மாலத்தீவில்தான் இருவரும் தஞ்சமடைந்தனர்.
மியான்மர் நாட்டில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதால் அந்நாட்டு எம்பிக்கள், அமைச்சர்கள் பலரும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
1970களில் வங்கதேச நாட்டின் விடுதலைப் போராட்ட காலத்தில் இந்திய ராணுவம் முழுமையாக உதவி செய்தது. வங்கதேச விடுதலைக்காக பாகிஸ்தானுடன் இந்தியா யுத்தம் நடத்திய காலத்தில் அதன் தலைவர்கள் இந்தியாவில் அடைக்கலம் புகுந்திருந்தனர். தற்போது பிரதமர் ஷேக் ஹசீனாவும் அவரது சகோதரியும் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications