"ஆதாரமே இல்லையே.. கைப்பற்றப்பட்ட பணம் எங்கே?" கெஜ்ரிவால் வழக்கில் நீதிமன்றம் கேட்ட மிக முக்கிய கேள்வி
டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு டெல்லி ரோஸ் அவின்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், அதற்கு டெல்லி ஐகோர்ட் தடை விதித்தது. இதற்கிடையே கீழமை நீதிமன்றத்தில் என்ன வாதங்கள் முன்வைக்கப்பட்டன.. எதற்காக கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த வியாழக்கிழமை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதாவது கெஜ்ரிவாலுக்கு இதில் நேரடியாகத் தொடர்பு இருக்கிறது என்பதற்கான ஆதாரத்தை அமலாக்கத் துறை சமர்ப்பிக்கத் தவறியதை மேற்கோள் காட்டிய டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கியது.

டெல்லி நீதிமன்றம்: இருப்பினும், கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஜாமீனுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கிடையே வியாழக்கிழமை கீழமை நீதிமன்றத்தில் நடந்த வாதங்கள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
கெஜ்ரிவாலுக்கு நிவாரணம் வழங்கும் உத்தரவில், சிறப்பு நீதிபதி நியய் பிந்து சில முக்கிய கருத்துகளைக் கூறினார். அதாவது கெஜ்ரிவால் குற்றம் செய்தார் என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். மேலும், "குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு (கெஜ்ரிவால்) தெரிந்த சில நபர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் இதன் மூலம் கிடைத்த ஆதாயம் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு சென்றுள்ளது என்பதை நிரூபிக்க அமலாக்கத் துறை தவறிவிட்டது" என்றார்.
தவறிவிட்டது: மேலும், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை பதிவு செய்த எஃப்ஐஆரில் கெஜ்ரிவால் பெயர் இல்லாத போது அவசர அவசரமாகக் கைது செய்தது ஏன் என்று கெஜ்ரிவால் தரப்பு கேள்வி எழுப்பி வருகிறது. இதைக் குறிப்பிட்ட நீதிபதி, இது தொடர்பாக ஏன் அமலாக்கத் துறை உரிய விளக்கம் தரவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். கோவா தேர்தலில் ஆம் ஆத்மி இந்த பணத்தைப் பயன்படுத்தியது என்ற குற்றச்சாட்டை அமலாக்கத் துறை நிரூபிக்கத் தவறிவிட்டது என்றும் விமர்சித்தார்.
பணத்தின் பெரும்பகுதி கைப்பற்றப்பட்ட நிலையில், எப்படி அதைக் கோவா தேர்தலில் செலவு செய்திருக்க முடியும் என்பதே அவரது கேள்வியாகும். அதாவது டெல்லியில் சில குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக மதுபான கொள்கையை உருவாக்க கெஜ்ரிவால் தரப்பு லஞ்சம் பெற்றனர் என்பதே குற்றச்சாட்டாகும். இந்த பணத்தைத் தான் ஆம் ஆத்மி தரப்பு கடந்த 2022 கோவா சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டுகிறது.
மிக முக்கிய கருத்து: இந்த பணத்தை அமலாக்கத் துறை முழுமையாகக் கைப்பற்றவில்லை என்றும் அந்த பணப் பரிவர்த்தனையைக் கண்டுபிடிக்க எவ்வளவு நேரம் தேவை என்பதையும் தெளிவுபடுத்த அமலாக்கத் துறை தவறிவிட்டதாக நீதிபதி கூறினார். இதுவே நீதிபதி கூறிய மிக முக்கிய பாயிண்ட். அதாவது லஞ்சமாகப் பெற்ற தொகை, அதை எப்படி செலவு செய்தார்கள் என்பதற்கான பரிவர்த்தனை ஆதாரங்களை அமலாக்கத் துறை முழுமையாகக் கண்டுபிடிக்கும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் (கெஜ்ரிவால்) சிறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒவ்வொரு நபரும் நிரபராதி என்று கருதப்பட வேண்டும் என்பதே நமது நாட்டின் சட்டம் என்பதால் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. 100 குற்றவாளிகள் கூட தப்பிக்கலாம்.. ஆனால் ஒரு நிரபராதி பாதிக்கப்படக்கூடாது என்ற அமெரிக்க அறிஞர் பெஞ்சமின் பிராங்க்ளின் கூறியதையும் நீதிபதி மேற்கோள் காட்டியிருந்தார். கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய போதிலும் டெல்லி ஐகோர்ட் அதற்கு இடைக்காலத் தடை விதித்தது. இதனால் அவர் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications