'பாரத் பந்த்' நாடு தழுவிய முழு அடைப்புக்கு விவசாயிகள்அழைப்பு.. எந்த சேவைகள் பாதிக்கும்?
டெல்லி: விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வலியுறுத்தும் வகையில், நாடு முழுவதும் இன்று பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். பல விவசாயிகள் சங்கங்களும், மத்திய தொழிற் சங்கங்களும் அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பால் போக்குவரத்து உள்ளிட்டவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். 'தி சம்யுக்தா கிசான்மோர்சா, தி கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 37 விவசாயிகள் சங்கங்தினர் இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். டெல்லியை நோக்கி செல்லும் இந்த போராட்டத்தை கடந்த செவ்வாய்க்கிழமை விவசாயிகள் தொடங்கினர்.

அவர்களை ஹரியானா எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாமல் தடுக்க ஹரியானா - டெல்லி எல்லையில் போலீசார் தடுப்புகள் அமைத்துள்ளனர். ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று 3வது நாளாக போராட்டம் நடந்தது. போலீசார் மற்றும் விவசாயிகள் இடையே தள்ளுமுள்ளு நடந்தது.
முழு அடைப்பு: இந்த போராட்டம் இன்னும் தொடர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி எல்லையில் பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராடம் அமைதியான முறையில் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதனிடையே, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று பல்வேறு விவசாய அமைப்புகள் நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.
சாலை மறியல்: சம்யுக்தா கிஷான் மோர்ச்சா உள்பட பல விவசாய அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பாரத் பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை முக்கிய சாலைகளை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தொழிற்சங்கம் பங்கேற்கும்: இன்று நடைபெற உள்ள பாரத் பந்தில் அதிமுகவின் 17 தொழிற்சங்கங்களும் பங்கேற்கும் என்று அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமலக்கண்ணன், மத்திய அரசைக் கண்டித்து ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளில் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள போராட்டத்தில் அதிமுக தொழிற்சங்கமும் பங்கேற்கும். திமுகவுக்கு தொழிலாளர்கள் மீது அக்கறை இல்லை" எனக் குற்றம் சாட்டினார்.
எந்த சேவைகள் பாதிக்கும்?: விவசாயிகள் விடுத்துள்ள இந்த முழு அடைப்பு போராட்டத்தால் போக்குவரத்து, விவசாய பணிகள், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்கள், தனியார் அலுவலகங்கள், கிராமப்புற அலுவலகங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. வட இந்தியாவில் இந்த போராட்டம் கொஞ்சம் தீவிரமாகவே இருக்கும் என்பதால் அங்கு இந்த சேவைகள் எல்லாம் பாதிக்கப்பட அதிக வாயுப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications