அப்பாடா.. கோவாக்சின் 3வது கட்ட டிரையல் முடிவுகளை சமர்ப்பித்தது பாரத் பயோடெக்.. அடுத்து என்ன?
டெல்லி: கோவாக்சின் 3வது டிரையல் டேட்டாவை இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பிடம் (DCGI) பாரத் பயோடெக் அமைப்பு சமர்ப்பித்துள்ளது.
இதையடுத்து இன்று பிற்பகலில், சப்ஜெக்ட் நிபுணர் குழு கூடி, இந்த டிரையல் முடிவுகள் குறித்து விவாதிக்க உள்ளது.
ஹைதராபாத்தில் உள்ளது பாரத் பயோடோக் நிறுவனம். கொரோனாவுக்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசியை கடந்த வருடம் இந்த நிறுவனம் கண்டுபிடித்தது.

கிளினிக்கல் டிரையல்
கடந்த ஆண்டே இதற்கான அவசர கால அனுமதியை வழங்கியது மத்திய அரசு. இந்த வருடம் ஜனவரி முதல் கோவிஷீல்டுடன், கோவாக்சினும் இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது. அதேநேரம், கிளினிக்கல் டிரையல் முடிவடையாமலே கோவாக்சினுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்திய மக்களை சோதனைக்கு உட்படுத்துகிறீர்களா என்று அவர்கள் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர்.

பக்க விளைவுகள் இல்லை
இதுவரை சுமார் 2 கோடி பேருக்கு மேல் கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பெரிதாக பக்கவிளைவுகள் எதுவும் பதிவாகவில்லை. இந்த நிலையில்தான் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 3வது கட்ட டிரையல் முடிவுகள் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து வரும் புதன்கிழமை உலக சுகாதார அமைப்புடன் ப்ரீ-சப்மிஷன் மீட்டிங்கில் பாரத் பயோடெக் பங்கேற்க உள்ளது. அப்போது, சர்வதேச அளவில் கோவாக்சின் மருந்துக்கான அவசரகால பயன்பாட்டுக்கு, அனுமதி வழங்க கோரிக்கை விடுக்கப்பட உள்ளது.

உலக சுகாதார அமைப்பு
இந்த ஆலோசனையின்போது 3வது கட்ட டிரையல் உலக சுகாதார அமைப்படிம், சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனம் ஏஎன்ஐ செய்தி ஏஜென்சியிடம் அளித்துள்ள தகவலில், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் 3வது கட்ட டிரையல் விவரத்தை வழங்க உள்ளதாகவும், மருத்துவ இதழ்களில் இது வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும், 3 மாதங்களில் இந்த பணிகள் நல்லபடியாக முடிவடையும் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு தடுப்பூசி
இதனிடையே, குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பரிசோதனைகளை பாரத் பயோடெக் இந்த மாதம் துவங்கியுள்ளது. 2 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 525 பேருக்கு இதுபோன்ற பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதன் வெற்றியை நாடு மிகவும் எதிர்பார்த்து காத்துள்ளது.

தடுப்பூசி சாதனை
மத்திய அரசு தனது வேக்சின் கொள்கையை நேற்று முதல் மாற்றியது. அதாவது மத்திய அரசே வாக்சின் அனைத்தையும் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க ஆரம்பித்துள்து. இதையடுத்து நேற்று ஒரே நாளில் நாடு முழுக்க 86 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை படைத்துள்ளது இந்தியா. அதிக தடுப்பூசி செலுத்தியதில் உலகிலேயே 3வது நாடு என்ற இடத்திற்கு நாடு முன்னேறியுள்ளது. இந்த நேரத்தில் கோவாக்சின் 3வது டிரையல் ரிசல்ட் வெளியே வந்துள்ளது. 3வது டிரையல் முடிவு வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து இந்த தடுப்பூசிக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications