தட்டுப்பாட்டை சமாளிக்க.. குஜராத்தில் கூடுதலாக 20 கோடி தடுப்பூசி உற்பத்தி.. பாரத் பயோடெக் அறிவிப்பு
டெல்லி: நாட்டில் தடுப்பூசிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், குஜராத் மாநிலத்தில் கூடுதலாக 20 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது.

இருப்பினும், தேவை அதிகமாக உள்ளதால் பல மாநிலங்களிலும் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை சீரம் நிறுவனமும் பாரத் பயோடெக் நிறுவனமும் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பாரத் பயோடெக் தனது இணை நிறுவனமான சிரோன் பெஹ்ரிங் நிறுவனத்தின் மூலம் குஜராத் மாநிலத்தில் கோவாக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. குஜராத்தில் ஆண்டுதோறும் 20 கோடி கொரோனா தடுப்பூசிகள் வரை உற்பத்தி செய்ய முடியும் என்றும் பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி என்பது 100 கோடியைத் தாண்டும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. குஜராத்தில் இந்த ஆண்டு இறுதி காலாண்டில் தடுப்பூசி உற்பத்தி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications