பாஜக மூத்த தலைவர் LK அத்வானிக்கு நாட்டின் மிக உயரிய ‘பாரத ரத்னா’ விருது.. அறிவித்தார் பிரதமர் மோடி!
டெல்லி: பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானிக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை அறிவித்துள்ளது மத்திய அரசு. 96 வயதாகும் அத்வானி, துணை பிரதமர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர்.
நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா, பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானிக்கு வழங்கப்பட உள்ளது. கராச்சியில் பிறந்த அத்வானி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவன தலைவர்களுள் ஒருவர். ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் இயக்கமான பாஜகவை வாஜ்பாயுடன் இணைந்து தொடங்கிய அவர், பாஜகவில் மிகப்பெரும் பொறுப்புகளை வகித்துள்ளார்.

அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரை முடிவில், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் அத்வானி துணை பிரதமராக பதவி வகித்தார். 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார் அத்வானி. 2015 ஆம் ஆண்டு எல்.கே. அத்வானிக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், "எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் தொலைபேசியில் அவரிடம் பேசி, இந்த கவுரவம் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன். நம் காலத்தின் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவரான அத்வானி, இந்தியாவின் வளர்ச்சிக்கு செய்த பங்களிப்பு மகத்தானது.
அடிமட்டத்தில் இருந்து நமது நாட்டின் துணைப் பிரதமராக நாட்டுக்கு சேவை செய்தது வரையிலான வாழ்க்கை அவருடையது. அவர் நமது உள்துறை அமைச்சராகவும், தகவல் தொடர்பு துறை அமைச்சராகவும் தன்னை சிறப்பித்துக் கொண்டார். அவரது நாடாளுமன்ற செயல்பாடுகள் எப்பொழுதும் அனைவருக்கும் முன்னுதாரணமானவை" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications