"இந்தியா" அணி இப்பதான் தூங்கி எழுந்திருக்கிறது.. "பாரத்' போன மாதமே வந்துருச்சு..கலாய்க்கும் பாஜக
டெல்லி: பிரதமர் மோடியின் பிரிக்ஸ் மாநாட்டு அழைப்பிதழிலேயே பாரத் என்ற பெயர் பயன்படுத்திவிட்ட நிலையில் இப்போது "இந்திய" கூட்டணி திடீரென எதிர்ப்பு தெரிவித்தது ஏன் என்பது பாஜகவின் கேள்வி.
டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டை முன்னிட்டு உலக நாடுகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளிக்க உள்ளார். இந்த விருந்துக்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசுத் தலைவர் என இடம் பெற்றிருந்தது. 75 ஆண்டுகாலமாக பயன்படுத்தப்படடு வந்த "இந்தியா" என்ற சொல்லை திடீரென "பாரத்" என மத்திய பாஜக அரசு மாற்றியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

பாஜக ஆதரவு: அதேநேரத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா தொடங்கி பல மாநில பாஜக அமைச்சர்களும் "பாரத்" என்ற சொல்லே சரியானது; அதனையே பயன்படுத்துவோம் என சமூக வலைதளங்களில் தெறிக்கவிட்டனர். இதனால் அரண்டு போனது "இந்தியா" கூட்டணி.
நாடாளுமன்றத்தில் தீர்மானம்?: அத்துடன் நாட்டின் பெயரையே "இந்தியா" என்பதை "பாரத்" என மாற்றப் போவதாகவும் "இந்தியா" கூட்டணி தலைவர்கள் கண்டனங்களைக் குவித்து வருகின்றனர். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் "இந்தியா"வின் பெயரை மாற்றும் தீர்மானத்தை மத்திய பாஜக அரசு கொண்டுவரப் போவதாகவும் தகவல்கள் காட்டுத் தீயாக தேசம் முழுவதும் பரவியது.

ஏன் மாற்றக் கூடாது?: "இந்தியா" என்பதுதானே அரசியல் சாசனத்தில் இடம் பெற்றிருக்கிறது. அதனை எப்படி "பாரத்" என மாற்ற முடியும்? இது சர்வாதிகாரம் என்றது "இந்தியா" அணி. ஆனால் அரசியல் சாசனத்தில் எத்தனையோ திருத்தங்களை செய்திருக்கிறோமே என பதிலடி கொடுத்தது பாஜக.
பிரிக்ஸ் மாநாடு: மேலும் பாரத் என்ற சொல்லை இப்போதுதான் பயன்படுத்தவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் தென்னாப்பிரிக்காவின் பிரிக்ஸ் மாநாட்டுக்கு பிரதமர் மோடி சென்ற போதே "பாரத்" என்றே பயன்படுத்தப்பட்டது. அதாவது "இந்திய பிரதமர்" என்பதற்கு பதிலாக "பாரத பிரதமர்" " Prime Minister of Bharat" என்றுதான் அரசாங்க அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போதே பாரத் என்பது நடைமுறைக்கு வந்துவிட்டது.
ஜி20 அடையாள அட்டை: இப்போது ஜி20 மாநாட்டுக்கான அதிகாரிகள் அடையாள அட்டைகளிலும் கூட பாரத் அதிகாரி "Bharat official' என்றுதான் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் "இந்தியா" கூட்டணி தலைவர்கள் தூங்கி எழுந்துவிட்டு இப்போது குய்யோ முறையோ என கதறுகிறார்கள் எனவும் பாஜகவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications