தனியாரிடம் 8 துறைகள்- தேச துயர தினம்.. மத்திய அரசுக்கு 'பங்காளி 'ஆர்.எஸ்.எஸ். தொழிற்சங்கம் செம சூடு
டெல்லி: நாட்டின் 8 பொதுத்துறை நிறுவனங்களை முழுமையாக தனியாருக்கு தாரை வார்க்கும் வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த நேற்றைய நாள் தேசத்தின் துயரமான தினம் என்று மத்திய பாஜக அரசை அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.ன் தொழிற்சங்கமான பாரதீய மஸ்தூர் சங்கம் (Bharatiya Mazdoor Sangh) கடுமையாக விமர்சித்திருக்கிறது.
Recommended Video
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை பாரதீய மஸ்தூர் சங்கம் கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க ரூ20 லட்சம் கோடி திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள், வழங்கப்பட வேண்டிய சலுகைகள் குறித்து கடந்த 4 நாட்களாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறார். இதில் 8 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு முழுமையாக தாரை வார்க்கும் வகையில் நேற்று அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார் நிர்மலா சீதாராமன்.
பணி நேரத்தை உயர்த்த கடும் எதிர்ப்பு.. போராட்டத்தில் குதிக்கும் ஆர்எஸ்எஸ் தொழிலாளர் அமைப்பு
இது தொடர்பாக பாரதீய மஸ்தூர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விர்ஜேஸ் உபாத்யாயா கூறியதாவது:
ரூ20 லட்சம் கோடி பொருளாதாரத் திட்டம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று 4-வது நாளாக சில அறிவிப்புகளை வெளியிட்டார். நேற்றுதான் தேசத்தின் துயரமான தினம். முதல் 3 நாள் அறிவிப்புகளை நீர்த்து போகச் செய்துவிட்டது நிர்மலா சீதாராமனின் நேற்றைய அறிவிப்புகள்.
தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் தங்களது முடிவுகள் தொடர்பாக ஆலோசிக்க மத்திய அரசு வெட்கப்படுகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது என்பதை கண்டித்து தொடர்ந்து நாங்கள் போராட்டங்களை நடத்தி வருகிறோம். மத்திய அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு மாற்றமும் தொழிலாளர்களை பாதிக்கக் கூடியது.
தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பறிக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. சமூக தாக்கங்கள் தொடர்பாக எந்த ஒரு ஆலோசனையையும் மத்திய அரசு நடத்துவது இல்லை. ஜனநாயகத்தின் அடிப்படை என்பதே சமூக உரையாடல்கள்தான். இதனை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.
பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 74% ஆக அதிகரித்திருக்கிறது மத்திய அரசு. இதற்காக மத்திய அரசு அறிவித்திருக்கும் நடைமுறைகள் ஏற்புடையது அல்ல. இவ்வாறு விர்ஜேஸ் உபாத்யாயா கூறியுள்ளார்.