டெல்லியில் சீதாராம் யெச்சூரி, டி.ராஜாவுடன் நிதிஷ்குமார் சந்திப்பு! கெஜ்ரிவாலையும் சந்திக்கிறார்!
டெல்லி: டெல்லியில் முகாமிட்டுள்ள பீகார் முதல்வரும் ஜேடியூ தலைவருமான நிதிஷ்குமார் இன்று இடதுசாரி தலைவர்கள் டி.ராஜா, சீதாராம் யெச்சூரியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த நிலையில் இன்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலையும் நிதிஷ்குமார் சந்திக்க உள்ளார்.
பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு ஆர்ஜேடி-காங்கிரஸிடன் இணைந்து ஜேடியூ புதிய ஆட்சியை அமைத்துள்ளது. பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து நிதிஷ்குமார் முதல்வராகி இருப்பதை பல்வேறு கட்சிகளும் வரவேற்றுள்ளன. இது 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
5000 கார் திருட்டு, பல கொலைகள்! 3 மனைவிகளுடன் உல்லாசம்! நாட்டின் பெரிய கார் திருடன்.. மிரண்ட போலீஸ்
நேற்று ராகுலுடன் சந்திப்பு
இதனைத் தொடர்ந்து தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ், பீகார் சென்று நிதிஷ்குமாரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அத்துடன் நிதிஷ்குமார், தேசிய அரசியலில் முக்கிய பங்காற்றவும் அவரது ஜேடியூ கட்சியினரே வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் 3 நாட்கள் பயணமாக நிதிஷ்குமார் நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் முகாமிடும் நிதிஷ்குமார் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரையும் சந்தித்து பேச திட்டமிட்டிருக்கிறார். மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேற்று நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். அப்போது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
நோ பிரதமர் வேட்பாளர்
பீகாரில் காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்த பின்னர் ராகுலை நேற்றுதான் முதன் முறையாக நிதிஷ்குமார் சந்தித்தார். அப்போது, ஜேடியூவின் ஆட்சி அமைய காங்கிரஸ் ஆதரவு அளித்ததற்கு நிதிஷ்குமார் நன்றியும் தெரிவித்து கொண்டார். இச்சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த நிதிஷ்குமார், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்த விவாதம் ஆரோக்கியமானது. எதிர்க்கட்சிகளின் பொதுவான பிரதமர் வேட்பாளராகும் விருப்பமோ தகுதியோ எனக்கு இல்லை என்றார்.
இடதுசாரி தலைவர்களுடன் சந்திப்பு
இதனைத் தொடர்ந்து இன்று டெல்லியில் சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ தலைவர் டி.ராஜா உள்ளிடோரை நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். இச்சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜா, பீகாரில் நிதிஷ்குமார் மேற்கொண்ட முடிவு நாட்டின் அரசியல் களத்தில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள் என அனைத்து தரப்பும் ஓரணியில் திரளுகிற தருணம் இது. பாஜகவை வீழ்த்துகிற நிதிஷ்குமாரின் வியூகத்துக்கு இடதுசாரிகள் உறுதுணையாக இருப்பார்கள். நாங்கள் நிதிஷ்குமாரின் முயற்சிகளை ஆதரிக்கிறோம் என்றார்.
அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்கிறார்
இதன்பின்னர் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை நிதிஷ்குமார் சந்தித்து பேச உள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தமிழகம் வருகை தந்திருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து தமிழ அரசின் மாணவிகளுக்கு ரூ1,000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று நிதிஷ்குமாரை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.