பீகார் தேர்தல்.. திணறும் ஆர்ஜேடி கூட்டணி.. இதற்கு முன் எத்தனை முறை ஆட்சியை பிடித்துள்ளது தெரியுமா?
பாட்னா: பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலாம மகாகட்பந்தன் கூட்டணி இதுவரை எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டு வென்றுள்ளன என்பதை பார்க்கலாம். ஆர்ஜேடி தொடங்கப்பட்ட காலத்தில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று வந்த நிலையில், தற்போது சில பின்னடைவை சந்தித்து வருவதாக பார்க்கப்படுகிறது.
பீகாரில் சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. பீகாரில் இரு கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில், மொத்தமாக 65.91 சதவிகித வாக்குகள் பதிவாகியது. வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே என்டிஏ கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. தற்போது என்டிஏ கூட்டணி 161 தொகுதிகளிலும், ஆர்ஜேடி கூட்டணி 76 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.

இதனால் மீண்டும் என்டிஏ கூட்டணியின் ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மீண்டும் ஆர்ஜேடி தலைமையிலான கூட்டணி தோல்வியை சந்தித்துள்ளது. தேஜஸ்வி யாதவ்வை முதல்வர் வேட்பாளராக அறிவித்தும், தோல்வி அடைந்திருப்பது விவாதமாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் பீகார் தேர்தலில் ஆர்ஜேடி தலைமையிலான கூட்டணி சந்தித்த தேர்தல்கள் குறித்து பார்க்கலாம்.
1997ஆம் ஆண்டு ஜனதா தள் கட்சியில் இருந்து பிரிந்து லாலு பிரசாத் யாதவ் உருவாக்கிய கட்சிதான் ராஷ்ட்ரிய ஜனதா தளம். இந்த கட்சி முதல்முறையாக 2000 பீகார் சட்டசபைத் தேர்தலில் 124 தொகுதிகளில் வென்று ஆட்சியை அமைத்தது. இதன்பின் 2005ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆர்ஜேடி கூட்டணியால் 75 இடங்களை வெல்ல முடிந்தது. அப்போது எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதன்பின் மீண்டும் நடந்த தேர்தலில் ஆர்ஜேடி வெறும் 54 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. தொடர்ந்து 2010 சட்டசபைத் தேர்தலில் ஆர்ஜேடி கட்சி 22 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதனால் நிதிஷ் குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்தது. ஆனால் 2015ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ஆர்ஜேடி, ஜனதா தள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாகட்பந்தன் கூட்டணி அமைந்தது.
இந்தக் கூட்டணி 178 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை அமைத்தது. அப்போது ஆர்ஜேடி 80 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாகவும் ஆதிக்கம் செலுத்தியது. பின்னர் 2020ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ஆர்ஜேடி தலைமையிலான மகாகட்பந்தன் கூட்டணி 110 தொகுதிகளில் வென்றது. இதில் ஆர்ஜேடி மட்டும் 75 தொகுதிகளை கைப்பற்றியது. ஆனாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை.
இதன்பின் நிதிஷ் குமாரின் கலகம் காரணமாக நிதிஷ் குமார் - ஆர்ஜேடி - காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து சில ஆண்டுகள் ஆட்சி அமைத்தன. ஆனால் நிதிஷ் குமார் மீண்டும் பல்டி அடித்து என்டிஏ கூட்டணிக்கு சென்றார். இதன் மூலமாக ஆர்ஜேடி தலைமையிலான கூட்டணி இதுவரை சந்தித்த தேர்தல்களில், 2 முறை மட்டுமே பெரும்பான்மையுடன் வென்றுள்ளன.












Click it and Unblock the Notifications