பட்ஜெட்டில் திருக்குறளை தவிர தமிழ்நாட்டுக்கு எதுவும் இல்லை – எதிர்க்கட்சிகள் கொதிப்பு
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று வாசித்தார். நிர்மலா சீதாராமனின் புடவையில் இருந்து அறிவிப்புகள் வரை பட்ஜெட்டில் பீகாரின் தாக்கம் அதிகம் இருந்தது. அதேநேரத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2025 இன்று தாக்கல் செய்தார். பொதுவாக பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்களில், தேர்தல்களில் பாஜகவுக்கு வெற்றியளித்த மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவமும், பாஜக தோல்வியடைந்த மாநிலங்களை புறக்கணிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

கடந்த 2024 பட்ஜெட்டில், அப்போது பாஜக மத்தியில் ஆட்சியமைக்க உதவியாக இருந்த பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு அதிக அறிவிப்புகள் வெளியாகின. அதேநேரத்தில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் புறக்கணிப்பட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதற்கு மறுப்பு தெரிவித்த பாஜக தலைவர்கள், காங்கிரஸ் ஆட்சியை விட அதிகளவு நிதி ஒதுக்கியுள்ளோம் என்று விளக்கமளித்தனர்.
இந்நிலையில் 2025 பட்ஜெட்டிலும் பாஜக பாரபட்சத்துடன் செயல்பட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. நிர்மலா சீதாராமன் சுமார் 75 நிமிடங்களுக்கு பட்ஜெட் வாசித்தார். அதில் அதிகளவு அவர் உச்சரித்த பெயர் பீகார். பட்ஜெட் வாசிக்க தொடங்கிய ஒரு மணிநேரத்தில் அந்த பீகாருக்கு அடுத்தடுத்து ஏழு அறிவிப்புகள் வெளியாகின.
மக்கானா உற்பத்தியை அதிகரிப்பதற்காக பீகாரில் மக்கானா வாரியம், பீகார் மாநிலத்தில் உணவு பதனிடும் பூர்வோதயா திட்டம் செயல்படுத்தப்படும், ஐஐடி பாட்னா விரிபடுத்தப்படும், பாட்னா விமான நிலையம் தரம் உயர்த்தப்படும், பீகாரில் புதிய விமான நிலையங்கள், தேசிய உணவு தொழில்நுட்ப கல்வி மையம், விவசாயிகளுக்கான சலுகைகள் வெளியாகின.

பீகாரில் இந்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அதை மனதில் வைத்துதான் அங்கு அதிக அறிவிப்புகள் வெளியாகியுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகி ஜெயராம் ரமேஷ் தன் எக்ஸ் தள பக்கத்தில், "பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்க பீகார் ஜேடியு போல ஆந்திரா தெலுங்கு தேசம் கட்சியும் காரணம்.
சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் பீகாருக்கு போனஸாக அறிவிப்புகளை அள்ளி வழங்கியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு தூணாக உள்ள ஆந்திராவை ஏன் திட்டமிட்டு புறக்கணித்துள்ளனர்." என்று கேள்வி எழுப்பியுள்ளார். "நிர்மலா சீதாராமன் திருக்குறளை மேற்கோள் காட்டினார். மற்றபடி ஒரு இடத்தில் கூட தமிழ்நாடு என்ற வார்த்தை பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
தமிழ்நாடு மட்டுமல்ல பட்ஜெட்டில் மொத்தமாக தென்னிந்தியாவே புறக்கணிக்கப்பட்டுள்ளது. திருக்குறளை போல, தெலுங்கில் ஒரு கவிதையை மேற்கோள் காட்டினார். அவ்வளவுதான். மொத்தத்தில் இது பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை மகிழ்ச்சிப்படுத்தும் பட்ஜெட்." என்று திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
"புதிய மெட்ரோ ரயில் திட்டங்கள், கல்வி நிறுவனங்கள் என்று தமிழ்நாட்டுக்கு சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எந்த அறிவிப்பும் வெளியாகாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. அடுத்தாண்டு தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அப்போதாவது தமிழகத்துக்கு திட்டங்கள் அறிவிப்பார்களா." என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications