உயர் ஜாதியினரின் வாக்கு வங்கியை தக்க வைக்க பாஜக பலே திட்டம்
டெல்லி: உயர் ஜாதியினரின் வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் 2019 லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு பெரும் சிக்கலாகி விடும் என்பதால் கட்சி பொறுப்புகளிலும், அரசு வேலைகளிலும் உயர் ஜாதியினரை அதிக அளவில் சேர்க்கும் திட்டத்தை பாஜக கையில் எடுக்கவுள்ளதாம்.
அண்மையில் வெளியான ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள், பாஜகவில் பெரும் புகைச்சலை கிளப்பி உள்ளது. மாநில அரசுகள் மீதான கோபம், பணமதிப்பிழப்பு என அடுக்கடுக்கான காரணிகள் கூறப்பட்டாலும், மத்திய அரசு தாழ்த்தப்பட்டோருக்கான சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததே முக்கிய காரணம் என்று அக்கட்சி திடமாக நம்புகிறது.
இந்த குறையை போக்கவும், வரக்கூடிய 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலை மனதில் கொண்டும் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதாவது, உயர் சாதியினரை திருப்திப்படுத்தினால் அவர்களின் வாக்குகளை அப்படியே அள்ளலாம் என்று கணக்கிட்டுள்ளது.
தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினரை மட்டுமல்லாமல் உயர் ஜாதியினரின் அபிமானத்தையும் சேர்த்துப் பெற பாஜக முடிவு செய்துள்ளது. பாஜக அமைப்பு ரீதியாக மட்டுமல்லாமல் அரசாங்கத்திலும் அவர்களுக்கு முக்கியத்துவம் தர முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
இதன் ஒரு பகுதியாக அரசு பணிகள், வாரியங்கள், மாநகராட்சிகள் உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள பதவிகளில் பெருமளவில் உயர் ஜாதியினரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அதேபோல கட்சியிலும் கூட முக்கிய பதவிகளில் உயர் ஜாதியினரை அதிக அளவில் நியமிக்கவுள்ளனராம்.
இதை செயல்படுத்தினால் அடுத்து வரக்கூடிய லோக்சபா தேர்தலில் வெற்றி கனியை பறிக்கலாம் என்று கருதுவதால், அதனை நோக்கி பாஜக முடிவு எடுத்துள்ளது. 2014ம் ஆண்டை போல 2019ம் ஆண்டு தேர்தலில் அவ்வளவு எளிதில் வெற்றி கிடைக்காது என்பதை உணர்ந்திருப்பதாக பாஜக முக்கிய தலைவர்கள் மறைமுகமாக கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.