மோடி, அமித்ஷாவுக்கு கடும் அதிர்ச்சி.. பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகர் பவன் சிங் திடீர் விலகல்!
டெல்லி: பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த போஜ்புரி நடிகர் பவன் சிங் திடீரென தாம் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார். இது தொடர்பாக பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு பவன் சிங் கடிதம் அனுப்பியிருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

லோக்சபா தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது. மொத்தம் 195 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். பிரதமர் மோடி வாரணாசியிலும் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா காந்தி நகரிலும் ராஜ்நாத் சிங் லக்னோவிலும் போட்டியிடுகின்றனர்.
பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்த வேட்பாளர்களில் போஜ்பூரி நடிகர் பவன் சிங்கும் ஒருவர். மேற்கு வங்கம் மாநிலம் அசன்சோல் லோக்சபா தொகுதி வேட்பாளராக நடிகர் பவன் சிங் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக நடிகர் சத்ருகன் சின்ஹா களமிறங்குவார் என்பதால் நாடறிந்த நட்சத்திர தொகுதியாக மாறியது அசன் சோல்.
இந்த நிலையில் இன்று தமது சமூக வலைதளப் பக்கங்களில் நடிகர் பவன் சிங், தாம் தனிப்பட்ட காரணங்களுக்காக லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை என பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளார். இது பாஜகவினரை கடுமையான அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
லோக்சபா தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் அண்மையில் விடிய விடிய நடைபெற்றது. இந்த ஆலோசனைகளுக்குப் பின்னரே அதிகாரப்பூர்வமாக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்படி அலசி ஆராய்ந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரபல நடிகர் பவன் சிங் திடீரென தேர்தலிலேயே போட்டியிடவில்லை என அறிவித்திருப்பது பாஜகவுக்கு பின்னடைவாகும்.
பெண்கள் குறித்து நடிகர் பவன் சிங் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையாக வெடித்திருந்தன. தற்போது பவன் சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது. இது பாஜகவுக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து தாம் லோக்சபா தேர்தலிலேயே போட்டியிடவில்லை என தப்பி ஓடிவிட்டார் பவன் சிங் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications