குடியரசுத் தலைவர் தேர்தல்.. திட்டத்தை தொடங்கிய பாஜக.. 14 பேர் கொண்ட குழு அமைப்பு
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக மத்திய அமைச்சர்கள், தேசிய செயலாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 14 பேர் கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ளது.
நாட்டின் குடியரசுத் தலைவராக இப்போது ராம்நாத் கோவிந்த் உள்ளார். அவரது பதவிக்காலம் விரைவில் முடியும் நிலையில், ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெறத் தேவையான வாக்குகள் கிட்டதட்ட உறுதியாகி உள்ளது. இதற்கிடையே அனைத்து எதிர்க்கட்சிகளும் பொதுவான வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் ஆலோசனையில் இறங்கி உள்ளது.
இதுதொடர்பாக கடந்த ஜூன் 15ம் தேதி டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தின் முடிவில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மலிகார்ஜுனா கார்கே, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்யவுள்ளது. இதனைத்தொடர்ந்து வரும் ஜூன் 21ம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் யார் வேட்பாளர் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பாஜக தரப்பில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப் போவதாக கூறப்பட்டது. அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவான வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகளுடன் ஆலோசிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியது.
இந்தநிலையில், குடியரசுத் தலைவர் தொடர்பான 14 பேர் கொண்ட குழு பாஜக அமைத்துள்ளது. அதில் மத்திய அமைச்சர்களும், தேசிய செயலாளர்களும் இடம்பெற்றுள்ளனர். அதன் ஒருங்கிணைப்பாளராக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் செயல்படவுள்ளார். அதேபோல் அஸ்வினி வைணவ், கிஷன் ரெட்டி, பாரதி பவார் உள்ளிட்டோர் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த 14 பேர் கொண்ட குழு, நாடு முழுவதும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலில், யார் வேட்பாளர் என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி, ஜி7 மாநாட்டிற்கு புறப்படுவதற்கு முன் பாஜக வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும், ஜூன் 26ம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications