தேர்தல் பத்திரங்கள் வழியாக பல ஆயிரம் கோடி நன்கொடை பெற்ற பாஜக.. ஆண்டு வாரியாக எவ்வளவு? லிஸ்ட் இதோ!
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக 2018 - 2023 ஆம் ஆண்டு வரை தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ. 6,564 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றுள்ளது. பாஜக 2018 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு தொகைக்கு தேர்தல் பத்திரங்களை பெற்றது என்ற விவரங்களை பார்க்கலாம்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 2017 - 18 ஆம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிவித்தது. இதற்காக சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் 2018 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி வெளியிடும். ஆயிரம் ரூபாய் முதல் 1 கோடி வரையிலான தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன.

தேர்தல் பத்திரங்களை இந்தியக் குடிமகனாக இருக்கும் நபர் அல்லது இந்தியாவில் இணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட ஒரு நபர் வாங்கலாம். ஒரு நபர் தனியாகவோ அல்லது பிற நபர்களுடன் கூட்டாகவோ தேர்தல் பத்திரங்களை வாங்க முடியும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (43 இன் 1951) பிரிவு 29 ஏ -இன் கீழ் பதிவு செய்யப்பட்ட, கடந்த பொதுத் தேர்தலில் மக்களவைக்கோ அல்லது சட்டமன்றத்திற்கோ மாநிலத்தின் மொத்த வாக்குகளில் ஒரு சதவீதத்திற்கும் குறையாத வாக்குகளைப் பெற்ற, அரசியல் கட்சிகள் மட்டுமே, தேர்தல் பத்திரங்களைப் பெற தகுதியுள்ள கட்சிகளாகும்.
தேர்தல் பத்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் உள்ள வங்கிக் கணக்கு மூலம் மட்டுமே தகுதியான அரசியல் கட்சியால் பணமாக்க முடியும். இந்த பத்திரங்களை வாங்கியவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது. 15 நாட்களுக்கும் பத்திரங்களை பணமாக மாற்ற வேண்டும். தேர்தல் பத்திரங்கள் சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு அரசியல் கட்சிகள் பெருமளவு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக பெற்றன. அதிலும் மத்தியில் ஆளும் பாஜகதான் அதிக அளவிலான நன்கொடையை பெற்றது.
இதற்கிடையே, தேர்தல் பத்திரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளது. தேர்தல் பத்திர முறை என்பது சட்ட விரோதமானது என்பதால் அதை ரத்து செய்வதாக அதிரடியாக அறிவித்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியை பெற்ற கட்சிகளுக்கு பெரிய அடியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாஜக, 6 ஆண்டுகளில் கிட்டதட்ட 6 ஆயிரம் கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெற்றுள்ளது. அப்படி, பாஜக 2018 ஆம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற தொகையின் விவரங்களை பார்க்கலாம்.
2018 ஆம் ஆண்டில் ரூ. 210 கோடி ரூபாயும், 2019 ஆம் ஆண்டு (தேர்தல் நடைபெற்ற வருடம்) ரூ. 1,450 கோடி ரூபாயும், 2020 ஆம் ஆண்டில் ரூ. 2,555 கோடியும் பெற்றுள்ளன. அதேபோல், 2021 ஆம் ஆண்டில் ரூ. 22.38 கோடி, 2022 ஆம் ஆண்டு ரூ. 1,033 கோடி, கடந்த 2023 ஆம் ஆண்டு ரூ.1,294 கோடி என 2018 - 2023 ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ. 6,564 கோடி ரூபாயை தேர்தல் பத்திரம் மூலம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications