"அதானியுடன் மோடியை தொடர்புபடுத்தி பேசுவதா?" ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் - பரபர உத்தரவு!
பாஜக எம்.பிக்கள் ராகுல் காந்திக்கு எதிராக மக்களவை செயலாளரிடம் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
டெல்லி: தொழிலதிபர் அதானி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புபடுத்தி உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மீது மக்களவைச் செயலாளரிடம் உரிமை மீறல் நோட்டீஸை பாஜக எம்பிக்கள் வழங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதானி விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் முடங்கி வருகின்றன.
இந்நிலையில், இந்த உரிமை மீறல் நோட்டீஸ் தொடர்பாக பதிலளிக்குமாறு ராகுல் காந்திக்கு மக்களவைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

புயலை கிளப்பிய அதானி விவகாரம்
இந்தியாவில் நம்பர் 1 பணக்காரராகவும், உலக அளவில் 3-வது பணக்காரராகவும் இருந்த கெளதம் அதானிக்கு எதிராக அமெரிக்காவைச் சேர்ந்த 'ஹிண்டன்பர்க்' நிறுவனம் வெளியிட்ட அறிக்கைதான் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பங்குச்சந்தையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு மோசடி செய்ததாக அதானி மீது 'ஹிண்டன்பர்க்' நிறுவனம் குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதனால் அதானி நிறுவனங்களின் பங்குகள் பெருமளவில் வீழ்ச்சியை சந்தித்து வருவதால், அவர் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் பல இடங்களுக்கு பின்தங்கிவிட்டார்.

எதிர்க்கட்சிகள் அமளி
இது ஒருபுறம் இருக்க, அதானி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவை நடவடிக்கைகள் கடுமையாக முடங்கியுள்ளன. இந்த விவகாரத்தில் பாஜக எம்.பி.க்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே காரசார விவாதம் நடந்து வருகிறது.

ராகுல் காந்தி பேச்சால் சர்ச்சை
இந்த சூழலில், கடந்த 7-ஆம் தேதி மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அதில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, அதானி மீது ஹிண்டன்பர்க் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வியெழுப்பினார். மேலும், மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகுதான், அதானியின் சொத்து மதிப்புகள் உயர்ந்ததாக தெரிவித்தார். இதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

உரிமை மீறல் நோட்டீஸ்
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் ராகுல் காந்திக்கு எதிராக மக்களவை செயலாளரிடம் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளனர். அதில், "பொய்யான, ஆதாரமற்ற தகவல்களை பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு மக்களவைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications