மற்ற கட்சிகளின் ஆட்சியை கவிழ்க்க..ரூ 6,300 கோடி செலவு செய்த பாஜக! அரவிந்த் கெஜ்ரிவால் பகீர் புகார்!
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான மோதல் முற்றி வரும் நிலையில், பாஜக மீது அவர் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ள நிலையில், சமீப காலமாக மத்திய அரசு உடனான அவரது மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதிலும், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டிற்கு பின்னர் மத்திய அரசை நேரடியாகவே கடுமையாக விமர்சித்து வருகிறார்.
வைகோ மகனின் 7 வருடக் கனவு! 3 வருட முயற்சி! 1 வருட உழைப்பு! 'மாமனிதன் வைகோ' ஆவணப்படம் தயார்!
கெஜ்ரிவால்
நேற்று தான் பாஜகவை மாநில அரசுகளைக் கொல்லும் சீரியல் கில்லர் என்று விமர்சித்து இருந்தார். இந்தச் சூழலில் அவர் இன்னும் கடுமையான விமர்சனங்களை பாஜக மீது முன்வைத்துள்ளார். அதாவது நாட்டில் பிற கட்சிகளின் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சுமார் ரூ.6,300 கோடியைச் செலவழித்து உள்ளதாகவும் இதற்காகவே பாஜக அரசு உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை விதித்து உள்ளதாகவும் சாடியுள்ளார். ஜிஎஸ்டி மற்றும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி, அந்த பணத்தை எம்எல்ஏக்களை வாங்கப் பயன்படுத்துவதாகச் சாடியுள்ளார்.
குற்றச்சாட்டு
இது குறித்து டெல்லி சட்டசபையில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை வேட்டையாடுவதற்கும், மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கும் பாஜக பல கோடி ரூபாயை செலவழித்து உள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
ஜிஎஸ்டி
மேலும், தயிர், மோர், தேன், கோதுமை, அரிசி போன்றவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.7,500 கோடி வருவாய் கிடைக்கும் என்று தெரிவித்து கெஜ்ரிவால், அரசுகளைக் கவிழ்க்க இதுவரை பாஜக 6,300 கோடி ரூபாய் செலவழித்து உள்ளதாகவும் சாடியுள்ளார். மேலும், அரசுகளைக் கவிழ்க்காமல் இருந்திருந்தால் உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்காது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
மணீஷ் சிசோடியா
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டிற்கு பின்னர் ஆம் ஆத்மி- பாஜக மோதல் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மியை உடைத்துக் கொண்டு தங்கள் பக்கம் வந்தால் அனைத்து கேஸ்களையும் கிளோஸ் செய்துவிடுவதாகவும் பாஜகவினர் தனக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆடியோ
அதேபோல ஆம் ஆத்மி கட்சியை உடைத்து ஆட்சியை கவிழ்க்க உதவினார் சிபிஐ வழக்குகளை ரத்து செய்வதாக பாஜகவினர் மணீஷ் சிசோடியாவிடம் கூறிய ஆடியோக்கள் அவரிடம் இருப்பதாக ஆம் ஆத்மி தரப்பினர் கூறுகின்றனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், "இந்த நேரத்தில் நாங்கள் அந்த ஆடியோவை வெளியிடத் தேவையில்லை. ஆனால் தேவைப்பட்டால், அந்த தொலைப்பேசி உரையாடலை ஆம் ஆத்மி வெளியிடும்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.