எரியும் "காக்கி" டிரவுசர்! ஆர்எஸ்எஸை தொட்ட காங்கிரஸ்! பாஜகவுக்கு வந்ததே கோபம்.. ஆவேசமாக பதிலடி
டெல்லி: ஆர்எஸ்எஸை விமர்சிக்கும் வகையில் காங்கிரஸ் ட்வீட் செய்து இருந்த நிலையில், அதற்கு பாஜக ஆவேசமாகப் பதிலடி கொடுத்து உள்ளது.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டும் வகையிலும் காங்கிரஸ் தொண்டர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் ராகுல் காந்தி பாத யாத்திரையைத் தொடங்கி உள்ளார்.
குமரியில் தொடங்கிய இந்த பாத யாத்திரை காஷ்மீரில் நிறைவடைகிறது. மொத்தம் 150 நாட்கள் நடைபெறும் இந்த பாத யாத்திரை, காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட மிகப் பெரிய பாத யாத்திரையாக உள்ளது.
மசால் தோசை “பார்சல்”.. காங்கிரஸ் இன்னும் அனுப்பல! மோசடி பண்ணிட்டாங்க - ஏங்கும் பாஜக எம்பி தேஜஸ்வி
ராகுல் காந்தி
மொத்தம் 3500 கிமீ தூரம் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ள ராகுல் காந்தி, 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாகப் பாத யாத்திரை செல்கிறார். இந்த பயணம் மக்களைப் புரிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பாக அமையும் என கூறப்படுகிறது. இப்போது கேரளாவில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதாகக் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
பாஜக
அதேநேரம் இந்த நடைப்பயணம் தொடங்கியது முதலே இதை பாஜக விமர்சித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தான், ராகுல் காந்தி அணிந்திருந்த பர்பெர்ரி பிராண்ட் டி சர்ட் விலை ரூ.41,257 என பாஜக தனது சாடியிருந்தது. இந்நிலையில், இன்று ஆர்எஸ்எஸை விமர்சிக்கும் வகையிலான படத்தைக் காங்கிரஸ் பகிர்ந்து உள்ளது. அதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் முன்பு அணிவகுப்புக்குப் பயன்படுத்தும் காக்கி டவுசர் தீயில் கருகும் வகையில் இருந்தது.
காக்கி டிரவுசர்
ராகுல் காந்தியின் பாத யாத்திரையைக் குறிப்பிடும் வகையில், இன்னும் 145 நாட்கள் உள்ளதாக அதில் கூறப்பட்டு இருந்தது. மேலும், பாஜக - ஆர்எஸ்எஸ் பரப்பிய வெறுப்பு வாதத்தைக் களையெடுக்கும் முயற்சி என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது. இது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் இதற்கு பாஜக கடும் பதிலடி கொடுத்து உள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, இந்த நாட்டில் வன்முறையைப் பரப்புவது தான் உங்கள் திட்டமா என்று ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.
பாஜக பதிலடி
பல்வேறு பாஜக தலைவர்களும் இதற்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர். தெற்கு பெங்களூர் எம்பி தேஜஸ்வி சூர்யா இது தொடர்பாகத் தனது ட்விட்டரில், "1984இல் டெல்லியைக் காங்கிரஸ் எரித்தது. 2002இல் அக்கட்சி உருவாக்கிய அமைப்பு கோத்ராவில் 59 கரசேவகர்களை உயிருடன் எரிக்கக் காரணமாக இருந்தது. இப்போது அவர்கள் தங்கள் அமைப்பை மீண்டும் வன்முறைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்திய அரசுக்கு எதிராகவே ராகுல் காந்தி போராடுகிறார்.
தேஜஸ்வி சூர்யா
இந்தப் படம் - நாட்டை தீக்கிரையாக்குவது காங்கிரஸ் அரசியலின் அடையாளமாகும்.. கடந்த காலத்தில் அவர்கள் கொளுத்திய நெருப்பு தான் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அவர்களை எரித்துள்ளது. ராஜஸ்தான் & சத்தீஸ்கிராவில் மீதமுள்ள கற்களும் விரைவில் சாம்பலாகிவிடும்" என்று அவர் கடும் பதிலடி கொடுத்து உள்ளார்.
வன்முறை தான் ராகுலுக்கு வேண்டுமா
அதேபோல காங்கிரஸை சாடியுள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா , "இது ஒற்றுமை யாத்திரை இல்லை. மாறாக நாட்டை பிளவுபடுத்தும் யாத்திரை தான் இது. காங்கிரஸ் கட்சி இவ்வாறு செய்வது இது முதல் முறை அல்ல. ராகுல் காந்தியிடம் நான் கேட்க விரும்புகிறேன். இந்த நாட்டில் வன்முறையைப் பரப்புவது தான் உங்களுக்கு வேண்டுமா? காங்கிரஸ் உடனடியாக இந்தப் படத்தை அகற்ற வேண்டும்" என்று கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளார்.