நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, பொருளாதார அவசர நிலையை பிரகடனப்படுத்துங்கள்.. காங். ஆவேசம்
டெல்லி: இந்திய மொத்த உள்நாட்டு 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவடைந்து 5 சதவீதமாக குறைந்துள்ளது. உற்பத்தி துறையில் வரலாறு காணாத அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது இதற்கு மற்றொரு முக்கிய காரணம்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ஜெய்வீர் ஷெர்கில் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜக தனிநபராக இந்திய பொருளாதாரத்தை பச்சை படுகொலை செய்து விட்டது. உற்பத்தி துறையாக இருக்கட்டும், மொத்த உள்நாட்டு உற்பத்தியாக இருக்கட்டும், அனைத்துமே வரலாறு காணாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளன.
ஆனால் இதுவரை தனது தவறை உணராமல் பாஜக அரசு சந்தோஷமான மனநிலையில் இருக்கிறது. தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என்று எண்ணம் இல்லை. வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ள, வேலைவாய்ப்பின்மை, உற்பத்தியின்மை போன்ற பிரச்சனைகளுக்கு பாஜக என்ற டாக்டர் சாவு மருந்தை கொடுத்து விட்டார்.
மத்திய அரசு உடனடியாக தனது தவறுகளுக்காக பொதுமக்களிடம், மன்னிப்பு கேட்டுவிட்டு, தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்திய பொருளாதாரம் சரிவடைந்துள்ளதை ரிசர்வ் வங்கியும் ஒப்புக்கொண்டுள்ளது. சமீபத்தில் ரிசர்வ் வங்கியிடம் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசு பெற்றுக் கொண்டது. இது போன்ற நடவடிக்கைகளுக்கு மத்தியில், மத்திய அரசு பொது மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.