"மிஷன் சவுத்!" நேரடியாக களத்திற்கு வரும் பிரதமர்.. எந்த மாநிலம் முதல் குறி? பாஜக போட்டுள்ள ஸ்கெட்ச்
டெல்லி: அடுத்து வரும் மக்களவை தேர்தலுக்கு முன்பு, தென் மாநிலங்களைக் குறிவைத்து பாஜக காய்களை நகர்த்தத் தொடங்கி உள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை பாஜக வென்ற பின்னர், அக்கட்சி தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சி அமைத்து வருகிறது. மேலும், அனைத்து மாநிலங்களிலும் கட்சியை பலப்படுத்தவும் பாஜக நடவடிக்கை எடுத்தது.
இது 2019 மக்களவை தேர்தலில் பாஜக எளிதாக வெல்ல உதவியது. இந்நிலையில் 2024 மக்களவை தேர்தலைக் குறி வைத்து பாஜக ஏற்கனவே வேலைகளில் இறங்கிவிட்டது.

மிஷன் சவுத்
பல ஆண்டுகள் முயற்சிக்குப் பின்னர், இப்போது தான் வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவின் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது. அடுத்து பாஜக தலைமை தனது பார்வையைத் தென் மாநிலங்களை நோக்கித் திருப்பி உள்ளன. 2024ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கு முன்னதாக தெலங்கானா, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களில் தனது பலத்தை அதிகப்படுத்த அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டு வருகிறது.
Recommended Video

களத்திற்கு வரும் மோடி
இதற்காக மிஷன் சவுத் என்ற திட்டத்தையும் பாஜக முன்னெடுத்துள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் வரை அனைவரையும் கொண்டு கேரளா, தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் கட்சியை வலுப்படுத்துவதைக் கூட்டு சவளாக பாஜக தலைமை கருதுகிறது.

கர்நாடகா
தென் மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டுமே பாஜக ஆட்சியில் உள்ளது. அதிலும் கடந்த தேர்தலில் பாஜகவால் பெரும்பான்மை பெற முடியவில்லை. அங்கு பாஜக எப்படி ஆட்சியை அமைத்து என அனைவருக்கும் தெரியும். கர்நாடகாவில் மக்களிடம் செல்வாக்கு பெற்ற எடியூரப்பாவும் இப்போது முதல்வர் பதவியில் இல்லை. இதனால் வேறு சில யுக்திகளைப் பயன்படுத்தி பாஜக அங்குத் தன்னை வலுவாக நிலைநிறுத்த முயல்கிறது.

தெலங்கானா
இந்நிலையில், கட்சியை வலுப்படுத்தும் உத்தியின் ஒரு பகுதியாக பாஜக தனது இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டத்தை ஜூலை 2-3 தேதிகளில் ஹைதராபாத்தில் நடத்த முடிவு செய்துள்ளது. கர்நாடகாவிற்கு அடுத்தபடியாக, தெலுங்கானா தேர்தலுக்கு பாஜக அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இதன் காரணமாகவே தேசிய செயற்குழு கூட்டத்தை தெலங்கானாவில் நடத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது.

நடவடிக்கை தீவிரம்
தெலங்கானாவில் வலுவான, சாத்தியமான எதிர்க்கட்சியாக உருவெடுக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக உள்ளது. தேசிய செயற்குழு கூட்டத்தின் முதல் நாளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மோடி, டிஆர்எஸ் கட்சி வாரிசு அரசியலில் ஈடுபடுவதாகச் சாடி இருந்தார். தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் ஏற்கனவே மாநிலத்தில் பாதயாத்திரைக்கு ஏற்பாடு செய்துள்ளார் தேசிய செயற்குழுவிற்குப் பிறகு தேர்தலைக் குறிவைத்து இதுபோன்ற அதிகளவில் நிகழ்ச்சிகளை நடத்தவும் பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது.

கேரளா
இதற்கு அடுத்து பாஜகவின் குறி கேரளா தான். கடந்த சட்டசபைத் தேர்தலில் 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரனை களமிறக்கினாலும், பாஜகவால் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் இடதுசாரிகள் ஆளும் கேரளாவில் நுழையப் பிரச்சினை சார்ந்த வியூகத்தை பாஜக முன்னெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு
தென்னிந்தியாவின் இந்த மாநிலங்கள் பாஜக சித்தாந்தங்களை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்பதால், அதை மக்களிடையே எடுத்துச் செல்லும் திட்டத்தையும் தனியாக பாஜக வைத்துள்ளது. கேரளா மற்றும் தமிழ்நாட்டில் 2026இல் தான் அடுத்த சட்டசபைத் தேர்தல் நடைபெறும். இருப்பினும், இரு மாநிலங்களிலும் கட்சியை வளர்க்கத் தேவையான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளது. இது 2024 மக்களவை தேர்தலில் கைகொடுக்கும் என பாஜக எதிர்பார்க்கிறது. இதன் காரணமாகவே பாஜக தேசிய தலைவர்கள் தென்னிந்தியா மாநிலங்களில் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்கள்.

முதல் குறி
இருப்பினும், அனைத்து மாநிலங்களையும் விட தெலங்கானா தான் பாஜகவின் முக்கிய இலக்காக உள்ளது. அடுத்தாண்டு இறுதியில் தெலங்கானாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ந்து இரு முறை இருப்பதால் டிஆர்எஸ் கட்சி மீது அதிருப்தி எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை அறுவடை செய்யும் நிலையில் காங்கிரஸ் இல்லை. இதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள பாஜக விரும்புகிறது.

திட்டம்
தெலுங்கானாவில் பாஜகவுக்கு இப்போது 3 எம்எல்ஏக்கள் மற்றும் 4 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். அடுத்தாண்டு தேர்தலில் டிஆர்எஸ்ஸை வீழ்த்துவதே பாஜகவின் முக்கிய இலக்கு. இதற்காக விவசாயிகளின் பிரச்சனைகளை பாஜக கையில் எடுத்துள்ளது. கேரளா, ஆந்திரா, தமிழகத்திற்கும் இதுபோன்ற திட்டங்களை வைத்துள்ள நிலையில், இவை அனைத்திற்குமான தொடக்கமாக இந்த செயற்குழு கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications