அவுரங்கசீப்பை வணங்கும் கெஜ்ரிவால், சிசோடியா.. ராணா பிரதாப் சிங் பேரை சொல்வதா? பாஜக பாய்ச்சல்
டெல்லி: அவுரங்கசீப்பை வணங்குகிற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இப்போது பிரச்சனை என்றவுடன் மகாராஜா ராணா பிரதாப்சிங் பெயரை சொல்வதா? என பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. டெல்லி யூனியன் பிரதேச அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. ஏற்கனவே மணீஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ ரெய்டும் நடத்தியது.

குஜராத் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி தலைவர்களை முடக்குவதற்காகவே மத்தியில் ஆளும் பாஜக அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அக்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மணீஷ் சிசோடியாவை பாஜக அரசு கைது செய்தாலும் செய்யக் கூடும் என்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
பாஜகவின் இந்த நெருக்கடி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மணீஷ் சிசோடியா பரபரப்பான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகிறார். மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்து ஏக்நாத் ஷீண்டே தலைமையில் பிளவை ஏற்படுத்தி முதல்வர் பதவி கொடுத்ததை போல தம்மை வைத்து டெல்லியில் பாஜக சதி திட்டம் தீட்டுகிறது என்கிறார் மணீஷ் சிசோடியா. ஆம் ஆத்மி கட்சியை உடைத்து பாஜகவில் இணைந்தால் தம் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக பாஜக பேரம் பேசுகிறது என்பதும் மணீஷ் சிசோடியாவின் கருத்து.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த மணீஷ் சிசோடியா, நான் ராஜபுத்திரன். ராணா பிரதாப்சிங்கின் வாரிசு. எங்கள் தலையைத்தான் வெட்டிக் கொள்வோமே தவிர, எவரிடமும் தலைவணங்க மாட்டோம் என ஆவேசமாக கூறியிருந்தார். இதற்கு காஷ்மீர் பைல்ஸ் திரைப்பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இது ஜாதிய மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது எனவும் கூறியிருந்தார்.
தற்போது பாஜகவும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. பாஜகவின் கபில் மிஸ்ரா, சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரவிந்த் கெஜ்ரிவாலும் மணீஷ் சிசோடியாவும் அரவிந்த் கெஜ்ரிவாலைத்தான் வணங்குவார்கள். இப்போது என்ன திடீரென ராணா பிரதாப் சிங்கை பயன்படுத்துகின்றனர். ஊழல் வழக்கில் கையும் களவுமாக சிக்கிக் கொண்டதால் இப்படி செய்கிறார்கள் என விமர்சித்துள்ளார். இவர்களது இந்தப் போக்கால் ராஜபுத்திர இளைஞர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர் என்றார் கபில் மிஸ்ரா.












Click it and Unblock the Notifications