நாட்டுக்காக குடும்பத்தையே விட்டு வந்த மோடியை ‘இந்து’ இல்லை என விமர்சிப்பதா? லாலு மீது பாஜக பாய்ச்சல்!
டெல்லி: பிரதமர் மோடி ஒரு இந்துவே அல்ல; தாய் இறந்த போது தலையை மொட்டையடிக்காதவர்தான் மோடி என பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ் விமர்சித்துள்ளதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு "இந்தியா" கூட்டணி கட்சிகள் பங்கேற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. பீகார் முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் நடத்திய ஜன் விஸ்வாஸ் யாத்திரை நிறைவு விழாவை ஒட்டி இப்பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இப்பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல லட்சக்கணக்கானோர் பங்கேற்ற மிக பிரம்மாண்ட பொதுக் கூட்டமாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் பேசிய லாலு பிரசாத் யாதவ், மோடிக்கு ஒரு நல்ல குடும்பமே கிடையாது. எனக்கு நல்ல குடும்பமே இருக்கிறது. என் மகள் ரோஷினிதான் எனக்கு சிறுநீரக தானம் கொடுத்தார். மோடி முதலில் இந்துவே இல்லை. அவர் தாய் இறந்த போது மொட்டை அடித்தாரா? அப்படி மொட்டை அடிக்காதவர் எப்படி இந்துவாக இருக்க முடியும்? என சாடியிருந்தார்.
லாலு பிரசாத் யாதவின் இந்த கடுமையாக விமர்சனம் பாஜகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் மோடி குடும்பம் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங்காக்கி வருகின்றனர் பாஜகவினர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக தலைவர்கள், பிரதமர் மோடி தமது குடும்பத்தை தேச சேவைக்காக ஒதுக்கி வைத்து விட்டு வந்தவர். பிரதமர் மோடிக்கு பின்னால் இந்திய தேசத்தின் மக்கள் இருக்கின்றனர். நாட்டின் பிரதமரான உடன் மோடி தீபாவளி கொண்டாடியதே தேசத்தைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களுடன்தான். மோடி தமது குடும்பத்தினருக்கு நேரம் செலவிடுவது இல்லை என்கின்றனர்.












Click it and Unblock the Notifications