மோடியின் முஸ்லிம் பேச்சு.. விமர்சித்த பாஜக சிறுபான்மை அணித் தலைவர் கட்சியிலிருந்து டிஸ்மிஸ்
டெல்லி: ராஜஸ்தானில் பிரதமர் மோடியின் இஸ்லாமியர்கள் குறித்த பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்த ஜெய்ப்பூர் பாஜக சிறுபான்மை அணித் தலைவர் உஸ்மான் கனி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் காங்கிரஸைச் சாடுவதற்காக மதத்தை முன்வைத்து பேசிய பிரசார பேச்சு மூன்று நாள்களாகப் பெரும் விவாதமாக மாறி உள்ளது.

கடந்த ஞாயிறு அன்று ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவரின் சொத்துகள் கணக்கிடப்படும் என்று அவர்களின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதே அதற்கு சாட்சி.
காங்கிரஸ் சார்பில் முன்பு பிரதமராக இருந்த மன்மோகன் சிங் என்ன சொன்னார்? என்பதை இப்போது நினைவுகூர்வோம். “நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை” என்று மன்மோகன் சிங் அன்று கூறியிருந்தார். அப்படியென்றால் யாருடைய சொத்துகளை பறித்து யாரிடம் கொடுப்பார்கள்?! சொத்துகள் ஊடுருவல்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்பதே அதன் பொருளாகும்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், ஊடுருவல்காரர்களுக்கே போக வேண்டுமா? நீங்கள் இதை அங்கீகரிக்கிறீர்களா? நம் பெண்கள் எவ்வளவு தங்கம் மற்றும் வெள்ளி வைத்திருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் கணக்கிடும். தங்கம் ஒரு பெண்ணின் சுயமரியாதை. ஒரு பெண்ணின் தாலியை பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது” இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.
இதற்கு காங்கிரஸ் , இடதுசாரிகள், திமுக உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தேர்தல் ஆணையத்தில் தனித்தனியாக புகாரும் அளித்துள்ளன. பிரதமர் மோடியின் இந்த பேச்சு மதுவெறுப்பின் உச்சம் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ள தனது பேச்சு குறித்து பிரதமர் மோடியே நேற்று பதில் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில் , "இதே ராஜஸ்தானில் 90 வினாடியில் , உங்களின் சொத்துகளை பறித்து தங்களின் ஸ்பெஷல் நபர்களுக்கு பகிர்ந்தளிக்க காங்கிரஸ் சாதி அரசியல் செய்கிறது என்ற உண்மையை வெளிப்படுத்தினேன்.
அதனால், காங்கிரஸும், இந்தியா கூட்டணிக் கட்சிகளும் பதற்றத்தில் இருக்கின்றனர். என்னை திட்டுகிறார்கள். அவர்கள் ஏன் உண்மையைக் கண்டு அச்சப்படுகிறார்கள்... எதற்காக அவர்கள் உருவாக்கிய கொள்கையை அவர்களே மறைக்கிறார்கள்... எதனால் இப்பொது அதை ஏற்றுக்கொள்ள பயப்படுகிறீர்கள்... தைரியமிருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை எதிர்கொள்ள நாங்கள் தயார்" இவ்வாறு பிரதமர் மோடி பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில் ராஜஸ்தானில் பிரதமர் மோடியின் இஸ்லாமியர்கள் குறித்த பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்த ஜெய்ப்பூர் பாஜக சிறுபான்மை அணித் தலைவர் உஸ்மான் கனி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
ஜெய்ப்பூர் பாஜக சிறுபான்மை அணித் தலைவர் உஸ்மான் கனி முன்னதாக பிரதமர் மோடி பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்ததுடன், ராஜஸ்தானில் இந்த பேச்சு காரணமாக 3 முதல் 4இடங்களை பாஜக இழக்க உள்ளதாகவும், வாக்குச் சேகரிக்கும் போது, பிரதமர் மோடியின் பேச்சு குறித்து மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உஸ்மான் கனி நீக்கப்பட்டுள்ளார்..












Click it and Unblock the Notifications