அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர்? தமிழக பாஜக தலைவர் நீங்கள்தானா? நயினார் நாகேந்திரன் கொடுத்த பதில்!
டெல்லி : தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்படுவீர்களா என்ற கேள்விக்கு பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற்றது. இதனால் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியால் ஒரு தொகுதியில் வெல்ல முடியாதது குறித்து நரேந்திர மோடியும் பேசி இருந்தார். இருந்தாலும் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.

குறிப்பாக தென் தமிழ்நாட்டில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னேறி உள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, தேனி உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் 2வது இடத்திற்கு வந்துள்ளனர். ஓபிஎஸ் உடன் கூட்டணி அமைத்தது ஒரு காரணமாக இருந்தாலும், முக்குலத்தோர் சமூக வாக்குகள் பாஜக பக்கம் திரும்பியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே 3வது முறையாக நரேந்திர மோடி நாளை பதவியேற்கவுள்ளார். பிரதமர் மோடியின் அமைச்சரவையில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேருக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் தமிழக பாஜகவில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அல்லது தமிழிசை செளந்தரராஜன் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளி வருகிறது. இதுகுறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசுகையில், தமிழ்நாட்டில் தனிப்பட்ட முறையில் பாஜக மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது.
பாஜக வேட்பாளர்கள் மொத்தமாக சுமார் 50 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளனர். இதன் மூலமாக சுமார் 11.24 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. என்னுடைய தேர்தல் தோல்விக்கும், ரூ.4 கோடி பணம் பிடிபட்டதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இதனை ஏற்கனவே பலமுறை கூறியுள்ளேன். அதேபோல் பாஜகவில் அனைவரும் இணைந்து வெற்றிக்காக பணியாற்றினோம். இதனால் மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன்.
பாஜக - அதிமுக கூட்டணி இருந்தால் வெற்றி என்பது சொல்லும் கருத்தை ஒவ்வொரு நபரின் பார்வையிலும் பார்க்க வேண்டும். ஏனென்றால் 2019ல் நாங்கள் கூட்டணி வைத்து தோல்வியடைந்தோம். அதேபோல் தமிழ்நாடு பாஜகவில் நடக்கும் மாற்றங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இதுகுறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
பாஜகவை பொறுத்தவரை தமிழிசை செளந்தரராஜன், எல்.முருகன் மற்றும் அண்ணாமலை ஆகிய மூவருமே வெவ்வேறு சமூக பின்னணியை கொண்டவர்கள். அவர்கள் தலைவர்களாக இருந்த காலக்கட்டத்தில் அந்தந்த பகுதிகளில் பாஜக வளர்ச்சியடைந்தது. தற்போது முக்குலத்தோர் சமூக வாக்குகள் பாஜகவுக்கு அதிகரித்துள்ள நிலையில், நயினார் நாகேந்திரனை மாநில தலைவராக நியமிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications