"குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்தால்".. மல்யுத்த வீரர்களின் போராட்டம்.. பாஜக பிரிஜ் சிங் பரபர பேச்சு
டெல்லி: பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இது குறித்து சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மல்யுத்த வீராங்கனைகள்/வீரர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது இவர்களின் இரண்டாவது போராட்டமாகும். கடந்த ஜனவரி மாதம் இதே கோரிக்கையை முன்வைத்து இவர்கள் போராட்டத்தை தொடங்கியபோது அரசியில் கட்சியினர் ஆதரவளிக்க முன் வந்தனர். ஆனால் இந்த விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்று கூறி இவர்கள் தன்னிச்சையாக போராட்டத்தை தொடர்ந்தனர்.
போராட்டம் நாடு முழுவதும் விவாத பொருளான நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இது குறித்து விசாரணை நடத்த முன்வந்தது. விசாரணையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சகம் அளித்த வாக்குறுதியையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஆனால் விசாரணை நடந்து 60 நாட்களுக்கு மேல் ஆகியும், தற்போது வரை பிரிஜ் பூஷன் சிங் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகட் ஆகியோர் தலைமையில் மல்யுத்த வீரர்கள்/வீராங்கனைகள் போராட்டத்தை தொடர்ந்தனர். இரண்டாவது முறையாக மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியது நாடு முழுவதும் மீண்டும் விவாதங்களை கிளப்பியது.
இந்த முறை அரசியல் கட்சிகள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஆதரவை மல்யுத்த வீரர்கள் வரவேற்றனர். சூழல் இவ்வாறு இருக்க கடந்த 28ம் தேதி புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத்தை முற்றுகையிட பெருமளவில் திரண்ட வீரர்கள் முன்னோக்கி சென்றனர். ஆனால் பாதுகாப்பு படையினர் இவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகட் உள்ளிட்ட வீரர்கள் மீது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
மேலும், ஜந்தர் மந்தர் பகுதியில் இவர்களுக்கு போராட்டம் நடத்த அனுமதியில்லை என்றும் மறுத்துவிட்டது. போராட்டக்காரர்கள் விரும்பினால் வேறு இடத்தில் அனுமதியளிக்கப்படும் என்றும் கூறியிருந்தனர். இது மல்யுத்த வீரர்களிடையே கடும் அதிருப்தி ஏற்படவே, "பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பாஜக எம்பி பிரிஜ் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய 7 நாட்களை எடுத்துக்கொண்ட டெல்லி போலீஸ் நியாயம் கேட்டு போராடிய எங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய 7 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தைதான் எடுத்துக்கொண்டது" என்று குற்றம்சாட்டினர்.
மேலும், பிரிஜ் சிங்கை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், தங்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலை கண்டித்தும் ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசி எறிய உள்ளதாக வீரர்கள்/வீராங்கனைகள் அறிவித்தனர். இதனையடுத்து நேற்று மாலை கங்கை நதி கரைக்கு வந்த வீரர்களிடமிருந்து பதக்கங்களை விவசாய சங்க தலைவர்கள் பெற்றுக்கொண்டனர். மேலும் இப்பிரச்னைக்கு 5 நாட்களில் உரிய தீர்வு காணப்படும் என்றும் வாக்குறுதி அளித்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாஜக எம்பி பிரிஜ் சிங்க், "இந்த விவகாரம் குறித்து தற்போது டெல்லி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் கைது செய்யப்படுவேன்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications