எதிர்க்கட்சிகள் பற்ற வைத்த நெருப்பு.. இந்தியா பெயருக்கே எதிர்ப்பு! பிரதமர் மோடி டூ அசாம் சிஎம் வரை
டெல்லி: எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைத்ததில் இருந்தே இந்தியா என்ற பெயர் மீதான விமர்சனங்களை பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி தொடங்கி அசாம் முதலமைச்சர் வரை தெரிவித்த கருத்துக்களை பார்ப்போம்.
அண்மையில் பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டது. Indian National Developmental Inclusive Alliance, (இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடகிய கூட்டணி) என்று வைக்கப்பட்ட பெயர் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கட்சிகளின் அடையாளத்தை காட்டுவதை விட "இந்தியா" என்று கூறியே முழக்கங்களை எழுப்பி வருகிறார்கள். மறுபக்கம் பாஜகவினரோ இந்தியா என்ற பெயரையே எதிர்க்க தொடங்கி இருக்கிறார்கள். இதை முதலில் தொடங்கி வைத்தவர் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா.
ட்விட்டர் பயோவில் இந்தியா என்ற பெயரையே நீக்கி பாரத் என்று அவர் மாற்றினார். "நான் பாரத் குறித்து ஒரு ட்வீட் வெளியிட்டேன். காங்கிரஸ் ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்கில் இந்தியா, ட்ஜிட்டல் இந்தியாவை நினைவூட்டி உள்ளது. அரசியலமைப்பால் ஏற்கப்பட்ட பெயரான இந்தியா, காலனித்துவ மரபில் இருந்து கடன் வாங்கப்பட்டது.
இந்தியாவுக்கும் பாரதத்துக்கும் இடையிலான நாகரீக மோதல் பெயர்களை தாண்டி ஆழமானது. பாரதம் வெல்ல வேண்டும். பாரதம் வெல்லும்." என தெரிவித்து இருந்தார். மறுபக்கம் டெல்லி பாரகாம்பா காவல் நிலையத்தில் அவினிஷ் மிஸ்ரா என்பவர் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டதற்கு எதிராக 24 எதிர்க்கட்சிகள் கட்சிகள் மீது புகாரளித்தார்.
பாஜகவின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடியும், "இந்தியன் முஜாஹிதீன் அமைப்பும் இந்தியா என்ற பெயரை பயன்படுத்தியது. கிழக்கு இந்திய கம்பெனியும் இந்தியா என்ற பெயரை பயன்படுத்தியது. எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரை பயன்படுத்துவது மற்றும் வேலைக்கு ஆகாது." என்று தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பாஜக மாநிலங்களவை உறுப்பினரான பன்சால் நாடாளுமன்றத்தில் பேசுகையில், "பிரிட்டிஷ் காலனியாத்த ஆட்சியாளர்களால் வைக்கப்பட்ட பெயர் இந்தியா. நமது நாட்டின் உண்மையான பழமையான பெயர் பாரத் என்பதுதான். சமஸ்கிருத பெயரான பாரத் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த பெயராகும்.
நமது நாடு வரலாற்று சிறப்பு மிக்க தனித்துவத்தை பெற்று உள்ளது. காலனியாதிக்க பெயரை தடை செய்ய வேண்டும். பாரத் என்ற பெயரை இந்தியா என பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மாற்றினார்கள். இந்தியா என்ற பெயர் அடிமைத்தனத்தின் குறியீடாக உள்ளது. அரசியலமைப்பில் இருந்தே அதை நீக்கம் செய்ய வேண்டும்." என அவர் தெரிவித்தார்.
இந்தியா 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடிய அமிர்த் காலமாக தற்போது அரசியலமைப்பின் முதலாவது ஆர்டிக்கிளில் நாட்டின் பாரத் என்று மாற்றி, இந்தியா என்ற பெயரை நீக்கம் செய்ய வேண்டும். பாரத் என்று பெயர் மாற்றம் செய்வது, நாட்டின் பாரம்பரியத்தை மதிப்பதுடன், காலனியாதிக்க அடையாளத்தை நீக்கும் முதல் படியாகும்." என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications