மக்களவையின் இடைக்கால சபாநாயகர்... பா.ஜ.க. எம்.பி. வீரேந்திர குமார் நியமனம்
டெல்லி: 17-வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜகவின் வீரேந்திர குமார் நியமனம் செய்யப்பட்டார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்பி வீரேந்திர குமார் இடைக்கால சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பாஜக ஆட்சியில் மோடி தலைமையிலான அமைச்சரவையில், சிறுபான்மையினர் நலன், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் இணை அமைச்சராக பதவி வகித்தார். இந்த நிலையில் அவர் இடைக்கால சபாநாயகராக செயல்பட்டு, புதிய எம்பிக்களுக்கு பதவி ஏற்பு உறுதிமொழி செய்து வைப்பார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. பாஜக மட்டும் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களை கைப்பற்றியது. 52 இடங்களை மட்டுமே பிடித்து எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட காங்கிரஸ் கட்சியால் பெற முடியாமல் போனது.
நரேந்திர மோடி 2-வது முறை பிரதமராக பதவியேற்றுள்ளார். பிரதமரைத் தொடர்ந்து 57 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இந்தநிலையில், 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வருகிற ஜூன் 17-ந் தேதி தொடங்க உள்ளது.
முதல் 2 நாளில் புதிய எம்.பி.க்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்கிறார்கள். அடுத்த மாதம், 26 ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ள இந்த தொடரில், ஜூலை 5ல், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும், ஜூலை 4ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
20-ந் தேதி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். ஜூன் 19-ம் தேதி மக்களவைக்கான புதிய சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து தொடர்ந்து 7வது முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வீரேந்திர குமார், 4 முறை சாகர் தொதியிலிருந்தும், 3 முறை திகம்கர் தொகுதியிலிருந்தும் எம்.பி.யாக வெற்றி பெற்றவர். கடந்த முறை துணை சபாநாயகராக தமிழகத்தை சேர்ந்த தம்பிதுரை இருந்தார். இந்த முறை, காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications