காத்துவாக்குல 2 மோதல்.. பாஜகவின் ஆபரேசன் "சவுத் இந்தியா"! இரட்டை இலை மூலம் தாமரையை மலர வைக்க திட்டம்
டெல்லி: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஒற்றைத் தலைமை பிரச்சனை 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் டெல்லியின் ஆதரவு யாருக்கும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், பாஜகவின் கணக்கோ வேறு விதமாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
ஓ.பி.எஸ். தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகளை கடந்து 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது. ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டார். அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு போட்டியாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை நீக்கினார் ஓ.பன்னீர்செல்வம்.
எடப்பாடி வர்றாரு.. ஒன்றாக களமிறங்கிய திண்டுக்கல்லின் இரு ’தலைகள்’! இவ்வளவு ஏற்பாடுகளா? பரபரத்த பழனி!
சென்னை திரும்பிய எடப்பாடி
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் கலந்துகொள்ள சென்ற எடப்பாடி பழனிசாமி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவியேற்பு விழாவிலும் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வார் என்றும், இடைபட்ட நேரத்தில் அதிமுக உள்கட்சி நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவர் விவாதிப்பார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன. இந்த சூழலில் பிரதமரை சந்திக்காமல் சென்னைக்கு திரும்பியது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
பாஜகவின் நிலைபாடு
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தரப்பு மீது பாஜக தலைமை அதிருப்தி இருப்பதாக செய்திகள் வெளியாகின. எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பாஜகவுக்கு எதிராக செயல்படுவதாகவும், பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டும் தீர்மானம் பொதுக்குழுவிலிருந்து நீக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைகளுக்கும் இதுவே காரணம் என்று பேசப்படுகிறது.
சென்னை வந்த மோடி
இந்த நிலையில் மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்கவிழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதனை தொடங்கி வைக்க வந்த பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாட்டில் 2 நாட்கள் தங்கி இருந்தார். அவரை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருதரப்பினரும் சந்தித்து அதிமுக விவகாரம் குறித்து பேச திட்டமிட்டு இருந்தனர்.
இருவருடனும் சந்திப்பு
இதில் தங்களில் ஒருவருக்கே சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும், அதை வைத்து டெல்லியின் பல்ஸ் எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம் என்று திட்டமிட்டனர் ஈபிஎஸும் ஓபிஎஸும். ஆனால், பாஜகவின் திட்டம் வேறாக இருந்தது. மோடியை வரவேற்க எடப்பாடி பழனிசாமிக்கும், பிரதமர் மோடி சென்னையிலிருந்து கிளம்பும்போது வழியனுப்ப ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நேரம் ஒதுக்கப்பட்டது.
எடப்பாடிக்கு முன்னுரிமை
கடந்த ஜூலை 2 ஆம் தேதி பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிமுக விழாவில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலிலும், அதன் பின்னர் அன்புமணி ராமதாஸுக்கு, அவர்களை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கும் பேச வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில் இம்முறையும் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக முன்னுரிமை அளித்துவிட்டு கடைசியாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுகிறது.
ஓ.பன்னீர்செல்வத்தின் நகர்வு
பொதுக்குழு, ஒற்றைத் தலைமை, வங்கிக் கணக்கு, தலைமை அலுவலகம் தொடர்பான அனைத்து வழக்குகளும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக போனாலும் டெல்லியின் மீதான நம்பிக்கையை இழக்காமல் ஓ.பன்னீர்செல்வம் அடுத்தடுத்த நகர்வுகளை எடுத்து வருகிறார். பொதுக்குழுவுக்கு வழக்கை விசாரிக்கும் கிருஷ்ணன் ராமசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து களமிறங்கியதும் இந்த நம்பிக்கையாலேயே என்று கூறப்படுகிறது.
Recommended Video
பாஜகவின் திட்டம்
ஆனால், தமிழ்நாட்டில் எப்படியாவது பாஜகவின் பிரதான கட்சியாக நிலைநிறுத்த வேண்டும் என்ற குறிக்கோளோடு பாஜக தலைமை செயல்பட்டு வருகிறது. எனவே அதிமுகவுக்குள் நிலவும் உட்கட்சிப்பூசலை பயன்படுத்தி பாஜக பிரதான எதிர்க்கட்சிபோல் செயல்பட்டு வருகிறது. தற்போது அதிமுக ஒரு தலைமையின் கீழ் ஒற்றைமையாக செயல்படத் தொடங்கினால் மீண்டும் இதேபோல் தங்களால் செயல்பட முடியாது என்பதால், ஈபிஎஸ், ஓபிஎஸ் என இருதரப்புக்கும் நம்பிக்கை கொடுத்து உட்கட்சிப்பூசலை பயன்படுத்தி தங்களை மேலும் வளர்த்துக் கொள்ளலாம் என்று பாஜக திட்டமிட்டு உள்ளது என்று கணிக்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்.