டெல்லி அரசியலில் திடீர் பரபரப்பு- மமதா பானர்ஜியை சந்தித்தார் சுப்பிரமணியன் சுவாமி!
டெல்லி: டெல்லியில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியை பாஜகவின் ராஜ்யசபா எம்.பி.யான சுப்பிரமணியன் சுவாமி இன்று மாலை சந்தித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மமதா பானர்ஜி முகாமிட்டுள்ளார். மமதா பானர்ஜியை ஹரியானாவின் அசோக் தன்வார், பீகாரின் பவன் வர்மா, டெல்லியின் கீர்த்தி ஆசாத் ஆகிய மூத்த தலைவர்கள் நேரில் சந்தித்து தங்களை திரிணாமுல் காங்கிரஸில் இணைத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஹரியானா, டெல்லி, பீகாரிலும் திரிணாமுல் காங்கிரஸ் அரசியல் களத்தில் இறங்குகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று பிரதமர் மோடியை மமதா பானர்ஜி சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது மேற்கு வங்க மாநிலத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய நிலுவைத் தொகைகள் குறித்து வலியுறுத்த உள்ளார். மேலும் பி.எஸ்.எப் எனப்படும் எல்லை பாதுகாப்பு படையின் வரம்பு எல்லை அதிகரிப்பு தொடர்பான அதிருப்தியையும் மமதா பானர்ஜி வெளிப்படுத்த இருக்கிறார் என கூறப்படுகிறது.

மமதா- சு.சுவாமி சந்திப்பு
இதனிடையே மமதா பானர்ஜியை பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி எம்.பி. சந்தித்து பேசினார். மத்திய அரசை அண்மைக்காலமாக அத்தனை பிரச்சனைகளிலும் விமர்சித்து வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி. மமதாவுடனான சுப்பிரமணியன் சுவாமியின் சந்திப்பு டெல்லி அரசியலில் பெரும் எதிர்பார்ப்பையும் கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது.

மமதா ஆதரவு குரல்
சுப்பிரமணியன் சுவாமியின் ராஜ்யசபா பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைகிறது. அவருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்.பி பதவி என்பது கிடைப்பதற்கான வாய்ப்புகள் நிச்சயம் இல்லை என்கின்றன டெல்லி தகவல்கள். இந்த நிலையில்தான் மமதா பானர்ஜி ஆதரவு நிலைப்பாட்டை சுப்பிரமணியன் சுவாமி எடுத்திருக்கிறார். மேலும் ரோமில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் மமதா பானர்ஜி பங்கேற்க உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏன் தடுத்தார்? எந்த விதிகளின் படி அமித்ஷா இப்படி தடுத்தார் என சரமாரி கேள்விகளை எழுப்பியிருக்கிறார் சு.சுவாமி.

மோடி தலையிட கோரிக்கை
மேலும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தி இருக்கிறார். அரசியல் சாசனத்தின்படி வெளிநாடு செல்லும் உரிமை என்பது அடிப்படை உரிமை. அப்படி இருக்கும் போது மமதா வெளிநாடு செல்வதை ஏன் தடுக்க வேண்டும்? இதில் பிரதமர் மோடி தலையிட்டு மமதா பானர்ஜிக்கு உரிய அனுமதியை வழங்க வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி குரல் கொடுத்துள்ளார்.

மே.வங்க ஆளுநருடனும் சந்திப்பு
இதனிடையே சுப்பிரமணியன் சுவாமியும் அவரது மனைவியும் செவ்வாய்க்கிழமையன்று மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்காரை கொல்கத்தாவில் சந்தித்தும் பேசியிருந்தனர். இந்த பின்னணியில்தான் மமதா பானர்ஜியை சுப்பிரமணியன் சுவாமி சந்தித்துள்ளார் என்கிற செய்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது என்கின்றனர் டெல்லி மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications