பிரியங்கா காந்தியின் நியமனம் சொல்வது காங். தோல்வியை தான்... பாஜக பொளேர் கருத்து
டெல்லி:உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பிராந்திய பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தியை நியமித்துள்ளதன் மூலம் காங்கிரஸ் தமது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளதாக பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் வலுவான கட்சிகளாக கருதப்படும், சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும், காங்கிரசுடன் கூட்டணியில்லை என்று அறிவித்து விட்டன. இதனால் அந்த மாநிலத்தில் தனித்துக் களம் காண வேண்டிய சூழலில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, தனது சகோதரி பிரியங்கா காந்தியை, மாநிலத்தின் கிழக்கு பிராந்திய பொதுச் செயலாளராக நியமித்துள்ளார்.
உத்தப்பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதிக்கு பொதுச் செயலாளராக ஜோதி ராதித்ய சிந்தியாவும், உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதற்கும் பொதுச் செயலாளராக கே.சி.வேணுகோபாலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில், தாய் சோனியாவுக்காகவும், சகோதரர் ராகுலுக்காகவும் இதுவரை பிரச்சாரம் மட்டுமே மேற்கொண்டு வந்த பிரியங்கா, தற்போது முழுமையான அரசியல் களத்திற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் இது கருத்து பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா கூறுகையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணியை காங்கிரஸை ஏற்றுக் கொள்ள வில்லை. அதனால் ராகுல் காந்தி தனக்கு உறுதுணையாக இருக்கும் நபரை தனது குடும்பத்திலேயே தேடிக் கண்டுபிடித்துள்ளார்.
இது ராகுல் காந்தியின் தோல்வியை காட்டுகிறது. பாஜகவிற்கு கட்சி தான் குடும்பம், ஆனால் காங்கிரஸிற்கு குடும்பம் தான் கட்சி. இது தான் பாஜகவிற்கும் காங்கிரஸுக்கும் உள்ள வித்தியாசம்.
காங்கிரஸ் கட்சியின் எல்லா தேர்வுகளும் ஒரு குடும்பத்தில் இருந்தே தேர்ந்தெடுக்கப்படுகின்றன. நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இவர்களுக்கு பிறகு யார்? என்ற கேள்வியை தான் மொத்த இந்தியாவுமே கேட்கிறது என்று கூறினார்.