பிரிவினைக்கு காரணமே இந்த நேரு தான்.. பரபரத்த பாஜக! சாவர்க்கரை இழுத்து நறுக் பதிலடி கொடுத்த காங்கிரஸ்
டெல்லி: இந்தியாவில் நாளை சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று பாஜக ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோ சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை ஒட்டுமொத்த தேசமே நாளை கோலாகலமாகக் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளன.
இதற்கிடையே இன்று பிரிவினை நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பாஜக பகிர்ந்துள்ள வீடியோ தான் இப்போது இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

பாஜக வீடியோ
ஒவ்வொரு ஆண்டும் பிரிவினையை நினைவு கூரும் வகையில் பிரிவினை நினைவு தினம் அனுசரிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அறிவித்து இருந்தார். இதையொட்டி பாஜக தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளது. சுதந்திரம் பெறும் சமயத்தில், 1947இல் பிரிவினை நடக்கக் காரணமாக நிகழ்வுகளை விளக்கும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது.

நேரு தான் காரணம்
மொத்தம் ஏழு நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் ஜவஹர்லால் நேருவே பிரிவினைக்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டி உள்ளது. பிரிவினை கோரிய முகமது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லீம் லீக் கட்சியின் கோரிக்கைகளுக்கு ஜவஹர்லால் நேரு பணிந்ததாக அதில் கூறப்பட்டு உள்ளது. மேலும், இந்தியா பாகிஸ்தானைப் பிரித்த சிரில் ஜான் ராட்க்ளிஃப் குறித்தும் அந்த வீடியோவில் சில தகவல்கள் இடம் பெற்று உள்ளது.

எப்படி அனுமதிக்கலாம்
இந்திய கலாசாரம் குறித்து எந்தவொரு விஷயத்தையும் தெரியாத ஒருவரை (சிரில் ஜான் ராட்க்ளிஃப்) எப்படி சில வாரங்களில் இந்தியாவைப் பிரிக்க அனுமதிக்கலாம் என்று கேள்வி எழுதப்பட்டு உள்ளது. பல நூற்றாண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்த மக்களை கலாசாரம் வரலாறு தெரியாத ஒருவர், வெறும் மூன்று வாரங்களில் பிரித்துள்ளார் என்று அந்த வீடியோவில் சாடி உள்ளது. மேலும், அதில் நேருவும் பிரிவினைக்குக் காரணம் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் தாக்கு
இந்நிலையில் இதற்குக் காங்கிரஸ் கடும் பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ், "பிரிவினையின் சோகத்தை வெறுப்பு பரப்பவும் தவறான எண்ணத்தைப் பரப்பவும் பயன்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சாவர்க்கர் தான் இரு தேசம் என்பதை முதலில் முன்னெடுத்தார். அதை ஜின்னா முழுமையாக்கினார்.

பதிலடி
சர்தார் படேல் கூட நாம் இந்த பிரிவினையை ஏற்கவில்லை என்றால், இந்தியா பல துண்டுகளாகப் பிரிந்து முற்றிலும் அழிந்துவிடும் என்றே கூறி உள்ளார். ஜன சங்கத்தை நிறுவிய ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, சந்திர போஸின் விருப்பத்திற்கு மாறாக வங்காளப் பிரிவினையை ஆதரித்தார். தேச ஒற்றுமைக்குப் பாடுபட்ட காந்தி, நேரு, படேல் உள்ளிட்டோரின் பாரம்பரியத்தைக் காங்கிரஸ் என்றும் நிலைநிறுத்தும். வெறுப்பு அரசியல் நிச்சயம் தோற்கடிக்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.

ஜோதிமணி
அதேபோல சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்நாடகாவில் வெளியாகும் தினசரி செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் இடம் பெற்றுள்ள போதிலும் நேரு படம் இடம் பெறவில்லை. இது தொடர்பாகக் கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமனி, "நீங்கள் அற்பத்தனமாக நேருவை மறைக்கலாம். ஆனால் வரலாறு அவரை எப்போதும் நினைவில் வைத்திருக்கும். உங்களால் ஒருபோதும் ஆர்எஸ்எஸை சேர்ந்தவர்களை விடுதலை போராட்ட வீரராகக் கூற முடியாது" என்று பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications