ஆஹா செம ட்விஸ்ட்.. வடகிழக்கு மாநிலங்களில் திடீரென போட்டியிலிருந்து விலகிய பாஜக! என்ன காரணம்
டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் உள்ள லோக்சபா தொகுதிகளில் பாஜக நேரடியாகப் போட்டியிடுவதைத் தவிர்த்து கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவு தரும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் அடுத்த மாதம் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதில் தேசியளவில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி இருக்கிறது.
பாஜக நிலைப்பாடு: இதற்கிடையே வரும் லோக்சபா தேர்தலில் வடகிழக்கு மாநிலங்களில் என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிராந்தியக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் மொத்தம் இரண்டு லோக்சபா இடங்கள் இருக்கும் நிலையில், அங்கே என்டிஏ கூட்டணியில் உள்ள கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரிப்போம் என்று பாஜக அறிவித்துள்ளது. அதேபோல நாகாலாந்தில் உள்ள ஒரே லோக்சபா தொகுதியில் நெய்பியு ரியோ தலைமையிலான தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு தர பாஜக முடிவு செய்துள்ளது.
"மோடிக்கு அதிர்ச்சி!" ஒரே நாளில் ஜகா வாங்கிய 2 பாஜக வேட்பாளர்கள்! அதுவும் குஜராத்தில்.. என்ன நடந்தது
யாருக்கு ஆதரவு: கடந்த ஓராண்டிற்கு மேலாகக் கலவரம் தொடரும் மணிப்பூரில் இன்னர் மணிப்பூர், அவுட்டர் மணிப்பூர் என மொத்தம் 2 லோக்சபா தொகுதிகள் உள்ளன. அதில் அவுட்டர் மணிப்பூரில் நாகா மக்கள் முன்னணி வேட்பாளருக்கு ஆதரவு தர பாஜக முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக பாஜகவின் வடகிழக்கு பொறுப்பாளர் சம்பித் பத்ரா தனது எக்ஸ் பக்கத்தில், "பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா அறிவுறுத்தலின்படி, மேகாலயாவின் இரு தொகுதிகள், அவுட்டர் மணிப்பூர், நாகாலாந்தில் உள்ள லோக்சபா தொகுதிகளில் பாஜக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தரும்" என்று அறிவித்துள்ளார்.
கடந்த தேர்தல்: அதேநேரம் காங்கிரஸ் மேகாலயாவில் ஷில்லாங் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அம்பரீன் லிங்டோவும், துரா தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் அகதா சங்மாவும் போட்டியிடுகின்றனர். கடந்த 2019இல் நடந்த லோக்சபா தேர்தலில் மேகாலயா தொகுதியில் பாஜக போட்டியிட்ட போதிலும் அங்கே அவர்களால் வெல்ல முடியவில்லை.
என்ன காரணம்: மணிப்பூரைப் பொறுத்தவரை அங்கே இன்னர் மணிப்பூர் தொகுதியில் பாஜக போட்டியிட முடிவு செய்த போதிலும், குக்கி இன மக்கள் அதிகம் வசிக்கும் அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் மணிப்பூரில் இந்த இன்னர் மணிப்பூரில் மட்டுமே பாஜகவால் வெல்ல முடிந்தது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூரில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக வன்முறை தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாகவே அங்கே கணிசமான கிறிஸ்தவ மக்கள்தொகை கொண்ட இந்தத் தொகுதிகளில் பிராந்தியக் கட்சிகளை ஆதரிக்க பாஜக முடிவு எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேநேரம் மற்ற வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், அசாம், அருணாசலப் பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பாஜக போட்டியிடுகிறது.












Click it and Unblock the Notifications