புதுச்சேரி:முதல்வர் ரங்கசாமி நீக்கம்? என்.ஆர். காங்கிரஸ் கட்சி உடைப்பு? மகாராஷ்டிரா பாணி பாஜக ஆட்சி?
டெல்லி: புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸை உடைத்து புதிய ஆட்சி அமைக்க பாஜக படுதீவிரமாக முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் பாஜக எம்.எல்.ஏக்கள் சிலர் அக்கட்சித் தலைவர் ஜேபி நட்டாவை நேரில் சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2021-ம் ஆண்டு புதுச்சேரி சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தம் உள்ள 30 இடங்களில் என்.ஆர். காங்கிரஸ் 10; பாஜக 6 இடங்களைக் கைப்பற்றின. திமுக 6; காங்கிரஸ் 2; சுயேட்சைகள் 6 இடங்களில் வெற்றி பெற்றனர். இதனையடுத்து புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. முதல்வராக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவி வகித்து வருகிறார்.

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி அமைந்த நாள் முதலே இரு கட்சிகளும் ஆளுக்கு ஒரு திசையில்தான் பயணிக்கின்றன. நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம், அமைச்சர் பதவி தொடங்கி அத்தனையிலும் அக்கப்போர்தான். இதனால் புதுச்சேரி ஆளுநரிடம் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பாஜக எம்.எல்.ஏக்களே ஆளும் அரசு மீது ஊழல் புகார் அளித்த வினோதமும் நடந்தது.
இதன் அடுத்த கட்டமாகவே டெல்லி சென்றனர் பாஜக எம்.எல்.ஏக்கள். டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்த பாஜக எம்.எல்.ஏக்கள், முதல்வர் பதவியில் இருந்து ரங்கசாமியை நீக்க வலியுறுத்தினர். அத்துடன் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்து சுயேட்சைகள் ஆதரவுடன் புதிய ஆட்சி அமைப்பது குறித்தும் விவாதித்தனராம். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாம்.
மகாராஷ்டிராவில் 25 ஆண்டுகால கூட்டணி கட்சியான சிவசேனாவையே உடைத்த பாஜகவுக்கு 10 எம்.எல்.ஏக்களை மட்டுமே வைத்திருக்கும் என்.ஆர். காங்கிரஸை இரண்டாக பிளவுபடுத்த முடியாதது அல்ல.. இதில் அவசரம் காட்டாமல் நிதானமாக செயல்பட வேண்டும் என டெல்லி தலைமை முடிவெடுத்துள்ளதாம். இதனால் புதுச்சேரி முதல்வர் என்.ஆர். ரங்கசாமியின் பதவிக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து காத்திருக்கிறது என்கின்றன டெல்லி தகவல்கள்.












Click it and Unblock the Notifications