"மூடா" முறைகேடு-சித்தராமையாவிடம் விளக்கம் கேட்ட ஆளுநர்- ஆட்சி கவிழ்ப்பு சதி- காங்கிரஸ் பகீர் புகார்!
டெல்லி: மூடா எனப்படும் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தில் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டது தொடர்பாக கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட் விளக்கம் கேட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக கொடுத்த புகார் மனுவின் அடிப்படையில் மாநில முதல்வர் சித்தராமையாவிடம் ஆளுநர் கெலாட் விளக்கம் கேட்டிருப்பது கர்நாடகாவில் ஆட்சியைக் கவிழ்க்கும் சதி என்று அம்மாநில அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் வால்மீகி வாரிய நிதி முறைகேடுகளால் அமைச்சர் நாகேந்திரா பதவி இழந்தார். பின்னர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தற்போது மூடா எனப்படும் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரிய முறைகேடுதான் கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வாரியமானது கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகளை சட்டவிரோதமாக ஒதுக்கியிருக்கிறது என்பது பாஜக புகார். ஆனால் மனைவி நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததற்கு இழப்பீடாகவே 14 மனைகளை ஒதுக்கீடு செய்தது மூடா என்கிறார் சித்தராமையா.
இந்த விவகாரத்தில் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டிடம் புகார் மனு கொடுத்திருந்தனர். மேலும் பெங்களூர்- மைசூர் பாதயாத்திரை நடத்தப் போவதாகவும் அறிவித்திருக்கிறது பாஜக.
பாஜகவின் இந்த பாதயாத்திரைக்கு அதன் கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜேடிஎஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான குமாரசாமி, இப்படி ஒரு பாதயாத்திரை நடத்த வேண்டிய தேவை என்ன பாஜகவுக்கு? எங்களை எல்லாம் கலந்து ஆலோசிக்கவே இல்லையே? என கொந்தளித்திருந்தார்.
இந்த நிலையில் முதல்வர் சித்தராமையாவிடம் மூடா முறைகேடுகள் தொடர்பாக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் விளக்கம் கேட்டதாக தகவல்கள் பரவி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு அம்மாநில அமைச்சர்கள் அடுத்தடுத்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் தமது அரசியல் சாசன வரம்பை மீறி செயல்படுவதாக அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா கூறியிருந்தார்.
இதேபோல மற்றொரு அமைச்சரான கிருஷ்ண பைரே கவுடா, இது கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை ஆளுநர் மூலம் கவிழ்க்கும் சதி என குற்றம் சாட்டியுள்ளார். அப்படி ஒரு முயற்சியை ஆளுநர் தொடர்ந்து மேற்கொண்டால் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடவும் தயங்கமாட்டோம். மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி மற்றும் குமாரசாமி ஆகியோர்தான் கர்நாடகா காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க டெல்லியில் சதி செய்கின்றனர் எனவும் கிருஷ்ண பைரே கவுடா குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications