"பாஜக vs நோட்டா!" திடீரென ரூட்டை மாற்றிய காங்கிரஸ்! இன்று தேர்தலில் இது பெரிய சுவாரசியம் தான்
டெல்லி: இன்று நான்காம் கட்ட லோக்சபா தேர்தல் தொடங்கியுள்ள நிலையில், இதில் இருக்கும் சில சுவாரசிய தகவல்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
நாடு முழுக்க இன்று லோக்சபா தேர்தல் நான்காம் கட்டம் நடந்து வருகிறது. மொத்தம் 96 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் நிலையில், காலை முதலே பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள். இந்த 4ஆம் கட்ட தேர்தல் நடக்கும் நிலையில், இங்குள்ள சுவாரசிய தகவல்கள் குறித்து நாம் பார்க்கலாம்.

நான்காம் கட்டமாக தெலுங்கானாவில் 17 தொகுதிகள், ஆந்திராவில் 25 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 13 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், ஜார்கண்டில் 4 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 8 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 11, ஒடிசாவில் 4 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதியில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.
நட்சத்திர வேட்பாளர்கள்: இந்த 4ஆம் கட்ட லோக்சபா தேர்தலில் பல முக்கிய நட்சத்திரங்களும் களத்தில் உள்ளன. உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மஹுவா மொய்த்ரா, காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பாஜகவின் நிர்மல் குமார் சாஹா, மஜ்லீஸ் கட்சியின் ஓவைசி ஆகியோர் இன்று களத்தில் உள்ளனர்.
ஆந்திரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை முதலமைச்சரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி போட்டியிடும் நிலையில், அவரது சகோதரி ஒய்எஸ் ஷர்மிளா அங்கு காங்கிரஸ் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்.
பணக்கார வேட்பாளர்கள்: இந்த 4ஆம் கட்ட லோக்சபா தேர்தலில் பணக்கார வேட்பாளர் என்றால் அவர் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிடும் பெம்மாசானி சந்திர சேகர் தான்.. இவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ₹ 5,700 கோடிக்கு மேலாக இருக்கிறது. அவருக்கு அடுத்து 4,568 கோடிக்கு மேலான சொத்து மதிப்புடன் தெலுங்கானாவைச் சேர்ந்த பாஜகவின் கோண்டா விஸ்வேஹ்வர் ரெட்டி இரண்டாவது இடத்தில் வருகிறார்.
பாஜக vs நோட்டா: இதில் பல தொகுதிகளில் பாஜகவுக்கு எதிராகக் காங்கிரஸ் தனது வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. ஆனால், இந்தூரில் மிகவும் வினோதமாக பாஜக vs நோட்டா என்ற போட்டி உருவாகி உள்ளது. ஏனென்றால் அங்குக் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அக்ஷய் காந்தி பாம் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி கடைசி நேரத்தில் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுவிட்டு பாஜகவில் ஐக்கியமானார்..
இதனால் அங்கு காங்கிரஸ் வேட்பாளரே இல்லாத சூழல் உருவானது. இதையடுத்து அங்குப் பொதுமக்கள் பாஜகவுக்குப் பதிலாக நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும் என காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
நட்சத்திரங்கள்: இந்த லோக்சபா தேர்தலில் உலகக் கோப்பையை வென்ற கிரிக்கெட் அணியில் இருந்தும் இரு நட்சத்திரங்கள் களத்தில் உள்ளனர். 1983 உலகக் கோப்பையை வென்ற கபில்தேவ் தலைமையிலான அணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கிர்த்தி ஆசாத், பர்தமான்-துர்காபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற யூசுப் பதான், முர்ஷிதாபாத் பெஹ்ராம்பூர் தொகுதியில் களமிறங்கி உள்ளார். இவர்கள் இருவரும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications