‘ஆந்திரா மல்லையாக்களை’ வளைத்துப் போட்ட பாஜக... 2 எம்.பிக்கள் ரெய்டுகளில் சிக்கியவர்கள்!
டெல்லி: பாஜகவுக்கு தாவிய தெலுங்குதேசம் கட்சியின் ராஜ்யசபா எம்.பிக்களில் 4 பேரும் தொழிலதிபர்கள். இவர்களில் 2 பேர் சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமான வரித் துறை சோதனைகளில் சிக்கியவர்கள்.
பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யும் செய்தித் தொடர்பாளருமான ஜி.வி.எல். நரசிம்ம ராவ் கடந்த நவம்பர் மாதம் ராஜ்யசபாவின் நடவடிக்கை கமிட்டிக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், தெலுங்குதேசம் எம்.பி.க்களான சி.எம். ரமேஷ், ஒய்.எஸ். சவுத்ரி இருவரும் 'ஆந்திராவின் விஜய் மல்லையாக்கள்'.. இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதே சி.எம். ரமேஷும் ஒய்.எஸ். சவுத்ரியும்தான் தற்போது பாஜகவில் ஐக்கியமாகி 'புனிதர்களாகி'விட்டனர். தற்போது பாஜகவுக்கு தாவிய 4 ராஜ்யசபா எம்.பி.க்களுமே தொழிலதிபர்கள்தான்.
இவர்களில் சி.எம். ரமேஷ், ஒய்.எஸ். சவுத்ரி ஆகியோர் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கப் பிரிவு ஆகியவற்றிடம் ரெய்டுகள், விசாரணைகள் என சிக்கி இருப்பவர். சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானி இடையேயான மோதலில் சி.எம். ரமேஷ் பெயரும் அடிபட்டது.
வங்கி கடன் மோசடிகள் தொடர்பாக ஒய்.எஸ். சவுத்ரியை சிபிஐ, அமலாக்கப் பிரிவு விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறது. ஆனால் இந்த இரு எம்.பிக்களும் எந்த தவறுமே செய்யவில்லை என பல்லவி பாடியிருந்தார்கள்.
இதனிடையே, கட்சி தாவிய 4 எம்.பிக்களும் தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காகவே இந்த முடிவை எடுத்துள்ளனர். இதை பொருட்படுத்த தேவை இல்லை என தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications