மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம்.. "அதனால்" ராஜஸ்தானில் முழங்கிய பிரதமர் மோடி
ஜெய்பூர்: 2024 லோக்சபா தேர்தலுக்கு பிறகு மத்தியில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிதான் அமையும் எனவும் அதனால், ராஜஸ்தானிலும் பாஜக ஆட்சி அமைவது அவசியமான ஒன்று என பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில் வரும் 25 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடிக்க பாஜகவும் வியூகம் வகுத்து வருகிறது. இதனால் அங்கு தேர்தல் களம் அனல் பறக்கிறது. இந்த நிலையில், உதய்பூரில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:- அடுத்த ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலுக்கு பிறகு எனது தலைமையிலான அரசு மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்பது நீங்கள் அனைவரும் அறிந்து இருப்பீர்கள். எனது மூன்றாவது ஆட்சி காலத்தில் உலகின் டாப் 3 பொருளாதார நாடுகளில் இந்தியா இடம் பிடிக்கும். இந்தியாவின் இந்த அசுர வளர்ச்சியில் ராஜஸ்தானும் பயன்பெறும்.
எனவெ, ராஜஸ்தானில் பாஜக ஆட்சி இருப்பது அவசியமானது. ராஜஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளாக அதிகார போட்டி நிலவுகிறது. இந்த போட்டியிலேயே ராஜஸ்தானை காங்கிரஸ் வீணடித்து விட்டது. ராஜஸ்தானை கொள்ளையடிக்க வேண்டும் என்ற ஒரே அஜெண்டாதான் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஊழல் என்பது தண்ணீரும் காற்றும் போன்றது. ஊழல் செய்யாமல் காங்கிரஸ் கட்சியால் செயல்பட முடியாது.
காங்கிரஸ் கட்சி இங்கு ஆட்சியில் இருப்பதால்தான் பி.எப்.ஐ போன்ற பயங்கரவாத அமைப்புகள் எந்த பயமும் இன்றி பேரணி நடத்துகின்றன. பயங்கரவாதிகளுக்கு அனுதாபம் கட்டும் அரசாக காங்கிரஸ் அரசு உள்ளது. ராஜஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தானை நம்பர் 1 ஆக காங்கிரஸ் ஆக்கியுள்ளது. காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்தால் ஏழைகள் இடம் பெயர்வு மேலும் உயரும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications