இனி குறைந்த விலையில் கிடைக்கும்.. ரத்தத்தை விற்க ‛ப்ளட் பேங்க்’களுக்கு தடை.. டிசிஜிஐ அதிரடி
டெல்லி: மருத்துவமனைகள் மற்றும் ரத்த வங்கிகளில் நோயாளிகளுக்கு தேவையான ரத்தம் என்பது அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் நோக்கத்தில் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (டிசிஜிஐ) சார்பில் அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இனி நோயாளிகளுக்கு குறைந்த விலையில் ரத்தம் கிடைக்கும்.
இந்தியாவில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் தனியாக ரத்த சேமிப்பு மையங்கள் (ஃப்ளட் பேங்குகள்) உள்ளன. விபத்தில் சிக்கி அதிகப்படியான ரத்தத்தை இழந்தவர்களுக்கும், அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நபர்களுக்கு தேவையான ரத்தத்தை வழங்கும் வகையிலும் இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

தற்போதைய சூழலில் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு இருக்கும் நபருக்கு தேவையான ரத்தத்தை சிலர் தங்களின் நண்பர்கள், குடும்பத்தினர் மூலம் தானமாக பெற்று பயன்படுத்துகின்றனர். அதேவேளையில் சில நேரங்கள் ரத்த தானம் செய்வோர் கிடைப்பது இல்லை. மேலும் Rare ரத்த குரூப் என்றால் உடனடியாக ரத்தம் கிடைக்காது. இந்த பிரச்சனையை சந்திப்போருக்கும் ரத்த சேமிப்பு மையங்கள் தான் பெரிதும் உதவியாக உள்ளன.
இருப்பினும் மருத்துவமனை மற்றும் ரத்த சேமிப்பு மையங்களில் இருந்து ரத்தம் என்பது இலவசமாக வழங்கப்படாது. அதற்கென தனியாக கட்டணம் என்பது வசூலிக்கப்படும். இந்நிலையில் தான் பல மருத்துவமனைகளில் ரத்த வங்கிகளில் இருந்து அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள், நோயாளிகள் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில் தான் டிசிஜிஐ எனும் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ( Drug Controller General of India) அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது ரத்தம் என்பது விற்பனைக்கு அல்ல என்ற அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நோயாளிகளுக்கு தேவையான ரத்தம் இருப்பு இருக்கும் பட்சத்தில் அதற்கு நடைமுறை கட்டணம் மற்றும் ரத்தத்தை சப்ளை கட்டணம் ஆகியவற்றை மட்டுமே வசூலிக்க வேண்டும். பிற கட்டணத்தை வசூலிக்க கூடாது என தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல் சார்பில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் மேற்கூறிய உத்தரவை அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ரத்த வங்கிகள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் இனி நோயாளிகளுக்கான ரத்தத்தின் விலை என்பது அதிரடியாக குறைய உள்ளது.
இந்த புதிய உத்தரவின்படி ரத்தம் அல்லது ரத்த கூறுகளுக்காான நடைமுறை கட்டணம் என்பது ரூ.250 முதல் ரூ.1,550 வரை மட்டுமே விதிக்க வேண்டும். அதன்படி பார்த்தால் ரத்தம் அல்லது ரத்த சிவப்பணுக்களுக்கான ஒரு பாக்கெட்டின் விலை என்பது ரூ.1,550 ஆகவும், பிளாஸ்மா மற்றும் பிளேட்லெட்டுகளின் ஒரு பாக்கெட் விலை ரூ.400 என்ற அளவில் மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications