10% இடஒதுக்கீடு:பிராமணர் மட்டுமல்ல மலங்கரா கிறிஸ்தவர், செட்டியார், நவாப் உட்பட 79 ஜாதிகளுக்கு பலன்!
டெல்லி: உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு என்பது பிராமணர்களுக்கு மட்டுமே ஆதாயம் தரக் கூடியது அல்ல; நாயர், செட்டியார், மலங்கரா கிறிஸ்தவர்; லப்பை, ராவுத்தர் என 79 ஜாதிகளுக்கும் பலன்தரக் கூடியது என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
முன்னேறிய வகுப்பில் பொருளாதார அடிப்படையில் அதாவது ஆண்டு வருமானம் ரூ8 லட்சம் உள்ளவர்கள் ஏழைகள் என வரையறை செய்யப்பட்டு அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தது மத்திய பாஜக அரசு. இதற்காக அரசியல் சாசனத்தின் 103-வது பிரிவில் திருத்தம் செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
உயர்ஜாதி ஏழைகளுக்கான இந்த 10% இடஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது அரசியல் சாசன உரிமைக்கு எதிரானது என்பது ஒரு வாதம். சமூக, கல்வி ரீதியாக ஒடுக்கப்பட்டோருக்குதான் இடஒதுக்கீடு; பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது அதன் நோக்கத்தை சிதைக்கும்; இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமே அல்ல என்பது இன்னொரு வாதம்.

10%% இடஒதுக்கீடு செல்லும்
இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் நேற்று தீர்ப்பளித்தது. 3 நீதிபதிகள், 10% இடஒதுக்கீடு செல்லும் என்றும் 2 நீதிபதிகள் 10% இடஒதுக்கீடு செல்லாது எனவும் தீர்ப்பளித்தனர். ஆனால் பெரும்பான்மை அடிப்படையில் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

திமுக சீராய்வு மனு
இத்தீர்ப்புக்கு எதிராக தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய உள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் உள்ள 82 விழுக்காடு பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட இன மக்களின் சமூகநீதியைக் காப்பாற்றிட, அரசியல்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாத்திட, மண்டல் கமிஷன் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு கொள்கையை நிலைநாட்டிட, சமூகநீதிக்காகத் தொன்று தொட்டுப் போராடி வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு (review petition) தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார்.

பலனடையும் 79 ஜாதிகள்
அதேநேரத்தில் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு என்பது பிராமணர்களுக்கு மட்டும் ஆதாயம் தரக் கூடியது அல்ல. ஏனெனில் முற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மொத்தம் 79 ஜாதிகள் இடம்பெற்றுள்ளன. அதில் பிராமணர்களும் ஒரு ஜாதி. மலங்கரா சிரியன் கிறிஸ்தவர், தாவூர், மிர், நவாப், அன்சாரி லப்பை ராவுத்தர் அல்லாத முஸ்லிம்கள், 501 செட்டியார், ஆற்காடு முதலியார், ஆற்காட்டு வெள்ளாளர், ஆரிய வைசிய செட்டியார், பலிஜா நாயுடு, கம்மவார் நாயுடு, கொங்கு செட்டியார், கொங்கு நாயக்கர், மேனன், நம்பியாரை உள்ளடக்கிய நாயர், நாட்டுக் கோட்டை செட்டியார் (நகரத்தார்), ரெட்டியார், சைவ வெள்ளாளர், வீர சைவர் என மொத்தம் 79 ஜாதியினரும் 10% இடஒதுக்கீட்டால் ஆதாயம் அடைகின்றனர் என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications