வினேஷ் போகத் மீது மீண்டும் நக்கல் விமர்சனம்.. பாஜக பேச்சை கேட்காத பிரிஜ் பூஷண்
டெல்லி: வினேஷ் போகத், பிரிஜ் பூஷண் சரண் சிங் இடையே மல்யுத்த விளையாட்டில் ஏற்பட்ட மோதல், அரசியல் ரீதியாக வெடித்துள்ளது. வினேஷ்போகத் காங்கிரஸில் இணைந்ததில் இருந்து பிரிஜ் பூஷண் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார். வினேஷ் குறித்து விமர்சிக்க வேண்டாம் என்று பாஜக தலைமை அறிவுறுத்தியும், அவர் மீண்டும் வினேஷை நக்கலாக விமர்சித்துள்ளார்.
ஹரியானா மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் இழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு ஆதரவு கரம் நீண்டன. அதேநேரத்தில் பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

முக்கியமாக பாஜக நிர்வாகியும், இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வன்கொடுமை புகார் வைத்தனர். அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வீராங்கனைகள் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் சர்வதேசளவில் கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், அக்டோபர் மாதம் 5ம் தேதி ஹரியானா சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். வினேஷ் போகத், ஜூலானா சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரசாரத்தை தொடங்கிவிட்டார்.
இதற்கு பிரிஜ் பூஷண் சரண் சிங், "மல்யுத்த வீரர்களின் போராட்டம் ஒரு நாடகம். காங்கிரஸ் கட்சி தான் அதை இயக்கியது. இன்னொரு வீராங்கனைக்கான வாய்ப்பை தட்டிப் பறித்துதான் வினேஷ் போகத் ஒலிம்பிக்ஸ் சென்றார். கடவுள் அதற்கான தண்டனையும்." என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த வினேஷ் போகத், "வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் பிரிஜ் பூஷண் சிங் தவறானவர் என்பதை நிரூபிப்போம். எங்கள் சட்டப்போராட்டத்தில் இருந்து விலக மாட்டோம். தன் மீது யாராவது புகார் தெரிவித்திருந்தால் தூக்கில் தொங்குவேன் என்று பிரஜ் பூஷண் கூறியிருந்தார். ஏராளமானோர் புகார் தெரிவித்துவிட்டோம். என்னுடைய திறமையின் அடிப்படையில்தான் நான் ஒலிம்பிக்ஸ் சென்றேன்." என்று கூறியிருந்தார்.
இது ஹரியானா அரசியலில் விவாதத்தை கிளப்பியுள்ளது. பொதுவாக ஹரியானா மாநிலத்தில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு அதிகம். இதனால் பிரஜ் பூஷண் சரண் சிங்குக்கு கண்டனங்கள் எழுந்தன. அது தங்களுக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்படுத்தி விடக்கூடாது என பாஜக நினைக்கிறது. இதையடுத்து "வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் பூனியா குறித்து எதுவும் பேச வேண்டாம் என்று பிரஜ் பூஷணுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தியது. ஆனால் பிரிஜ் பூஷண் சிங் அதை கேட்கவில்லை. வினேஷ் போகத்தை அவர் மீண்டும் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பிரிஜ் பூஷண், "வினேஷ் போகத் கில்லாடி பெண். ஒட்டு மொத்த சிஸ்டத்தையும் ஹைஜேக் செய்வது எப்படி என்று அவருக்கு தெரியும். அதனால் காங்கிரஸ் அவரை ஹரியானாவில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். நான் உங்களிடம் தவறாக நடந்திருந்தால், அப்போதே என் கன்னத்தில் அறைந்திருக்கலாமே. காங்கிரஸில் இணைவதற்கு தான் இவ்வளவு டிராமாவும் நடத்தினீர்களா என்று மக்கள் கேட்கின்றனர். என் மீதான புகார் தவறு என்று நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications