இந்தியாவின் கிழக்கு ஆசியா கொள்கையில் புருனே, சிங்கப்பூர் முக்கிய கூட்டணி நாடுகள்.. பிரதமர் மோடி
டெல்லி: இந்தியாவின் கிழக்கு நோக்கிய ஆசியா கொள்கையில் புருனே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் மிக முக்கியமானவை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும் தமது பயணங்கள் புருனே, சிங்கப்பூர் மற்றும் ஆசியான் மண்டலத்துடனான நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி இன்று புருனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். இந்திய பிரதமர் ஒருவர் புருனே நாட்டுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை. தமது புருனே, சிங்கப்பூர் பயணத்துக்கு முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை விவரம்:

புருனேவுக்கு முதலாவது இருதரப்பு பயணம்: இன்று, புருனே தாருஸ்ஸலாமுக்கு முதன்முறையாக இருதரப்பு பயணத்தை மேற்கொள்கிறேன். நமது ராஜதந்திர உறவுகளின் 40 ஆண்டுகளைக் கொண்டாடும் வேளையில், நமது வரலாற்றுச் சிறப்புமிக்க உறவை புதிய உயரங்களுக்கு முன்னெடுத்துச் செல்வதற்காக மதிப்பிற்குரிய சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா மற்றும் அரச குடும்பத்தின் பிற மதிப்புமிக்க உறுப்பினர்களுடனான எனது சந்திப்புகளை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
சிங்கப்பூர் பயணம்: புருனேயிலிருந்து செப்டம்பர் 4-ஆம் தேதி சிங்கப்பூர் செல்கிறேன். அதிபர் தர்மன் சண்முகரத்தினம், பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் திரு லீ சியன் லூங் மற்றும் ஓய்வுபெற்ற மூத்த அமைச்சர் திரு கோ சோக் டோங் ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பை நான் எதிர்நோக்கியுள்ளேன். சிங்கப்பூரின் துடிப்பான வர்த்தக சமூகத்தின் தலைவர்களையும் நான் சந்திக்க உள்ளேன். சிங்கப்பூருடனான நமது உத்திசார் கூட்டாண்மையை, குறிப்பாக மேம்பட்ட உற்பத்தி, டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் நீடித்த வளர்ச்சி ஆகியவற்றின் புதிய மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் ஆழப்படுத்துவதற்கான எனது விவாதங்களை நான் எதிர்நோக்கியுள்ளேன்.
கிழக்கு நோக்கி கொள்கை: நமது கிழக்கு நோக்கிய கொள்கை மற்றும் இந்தோ-பசிபிக் தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றில் இரு நாடுகளும் முக்கிய கூட்டாளிகளாக உள்ளன. எனது பயணங்கள் புருனே, சிங்கப்பூர் மற்றும் ஆசியான் மண்டலத்துடனான நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்: பிரதமர் மோடியின் பயணம் தொடர்பாக வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த மத்திய வெளிய்றவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மிகவும் வலுவதாக இருக்கிறது. இந்தியாவிலும் உலகிலும் காணப்படும் மாற்றங்களைக் கருத்தில்கொள்ளும்போது தொடர்புகள் காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும். இதனடிப்படையில்தான் பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூருக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தார் என்றார்.












Click it and Unblock the Notifications