சிங்கம் களமிறங்கிடுச்சே.. அடுத்த வருடம் ஆகஸ்ட் 15ல் பிஎஸ்என்எல் 5ஜி சேவை தொடக்கம்- மத்திய அமைச்சர்
டெல்லி: 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் பிஎஸ்என்எல்-ல் 5ஜி சேவை கொண்டு வரப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஜூலை 26ம் தேதி 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் தொடங்கியது. 7 நாட்கள் நீடித்த ஏலம் ஆகஸ்ட் 1ம் தேதி முடிவடைந்தது. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. மொத்தம் 72 ஆயிரம் மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்துக்கு விடப்பட்ட நிலையில் 51,236 மெகா ஹெர்ட்ஸ் ஏலம் போனது.
மொத்தமாக ரூ.1.5 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டது. அதிகபட்சமாக ஜியோ நிறுவனம் ரூ.88,078 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஏர்டெல் ரூ.43,084 கோடிக்கும், வோடஃபோன் ஐடியா ரூ.18,799 கோடிக்கும், அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ரூ.212 கோடிக்கும் 5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்தன.
5 ஜி இணைய சேவை எப்படி இருக்கும்?.. பிரதமர் மோடிக்கு நேரில் டெமோ காட்டிய ஆகாஷ் அம்பானி!
பிரதமர் மோடி பேச்சு
இந்த நிலையில் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வு தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வு மொத்தம் நான்கு நாட்கள் நடைபெறுகின்றன. இதில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்வில் ரிலையன்ஸ் ஜியோ சார்பில் முகேஷ் அம்பானி மற்றும் ஏர்டெல் நிறுவனம் சார்பில் பாரதி மிட்டல்பங்கேற்றனர்.
புதிய வரலாறு
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி போன்ற சேவைகளுக்கு வெளிநாடுகளை நம்பி இந்தியா இருந்தது. ஆனால் 5ஜி மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. நாட்டில் டிஜிட்டல் புரட்சியை உருவாக்க பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சாதனங்களின் விலை மற்றும் டேட்டா திட்டங்கள் வரை கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
குறைந்த விலையில் டேட்டா
கடந்த 2014ல் வெறும் 2 மொபைல் உற்பத்தி கூடங்கள்தான் இருந்தன. இப்போது அந்த எண்ணிக்கை 200 என அதிகரித்துள்ளது. ரூ.300 என இருந்த 1 ஜிபி டேட்டா விலை, இப்போது ரூ.10ஆக மாறியுள்ளது. உலகிலேயே மிகவும் மலிவான விலையில் டேட்டா கட்டணங்களை இந்தியா கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.
அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி
தொடர்ந்து, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில். இன்று பிரதமர் மோடி இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளார். இந்த நாள் தொலைத்தொடர்பு துறை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் நிரப்பப்படும். டிஜிட்டல் இந்தியாவுக்கான அடித்தளமான தொலைத்தொடர்புத்துறை விளங்குகிறது.
பிஎஸ்என்எல்-ல் 5ஜி சேவை
அடுத்த 6 மாதத்தில் இந்தியாவின் 200 நகரங்களில் 5ஜி சேவை அமல்படுத்தப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டின் 80 முதல் 90 சதவிகிதம் பகுதிகளுக்கு 5ஜி சேவையை கொண்டு சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2023ம் அண்டு ஆகஸ்ட் 15 முதல் பிஎஸ்என்எல்-ல் 5ஜி சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.